இலங்கையின் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற மூன்று வெவ்வேறு வீதி விபத்துக்களில் சிக்கி மூவர் உயிரிழந்துள்ளனர். நேற்று (20) லக்கல, பதுளை மற்றும் நவகமுவ ஆகிய பொலிஸ் பிரிவுகளில் இந்த விபத்துக்கள் இடம்பெற்றுள்ளன.
லக்கல பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகமூன – ஹெட்டியப்பொல வீதியின் தேவாலதெனிய சந்திக்கு அருகில் டிப்பர் வாகனம் ஒன்று பாதசாரியுடன் மோதி விபத்துக்குள்ளானது. இதில் காயமடைந்த 32 வயதுடைய தேவாலதெனிய பகுதியைச் சேர்ந்த நபர், லக்கல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது ஏற்கனவே உயிரிழந்திருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
பதுளை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தல்தென புஸ்ஸல்லாவ பகுதியில் மோட்டார் சைக்கிள் ஒன்று ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானது. இதில் படுகாயமடைந்த 39 வயதுடைய மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் பதுளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவர் புஸ்ஸல்லாவ பகுதியைச் சேர்ந்தவராவார்.
அதேபோல், நவகமுவ பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஹோமாகம – கடுவலை வீதியின் வலவ்வத்தை பகுதியில் மோட்டார் சைக்கிள் ஒன்று வீதியைக் கடந்த பாதசாரி மீது மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.
இதில் காயமடைந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுநரும் பாதசாரியும் நவகமுவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், ரணால பகுதியைச் சேர்ந்த 69 வயதுடைய பாதசாரி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.