இஸ்ரேலின் குடிவரவு மற்றும் குடியகல்வு சட்டங்களை மீறிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 9 இலங்கை பிரஜைகள், இன்று (16) இலங்கைக்குத் திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக இஸ்ரேலுக்கான இலங்கை தூதுவர் நிமல் பண்டார தெரிவித்துள்ளார்.
இது குறித்துத் தனது உத்தியோகபூர்வ முகநூல் (Facebook) பக்கத்தில் பதிவிட்டுள்ள தூதுவர் நிமல் பண்டார, குறித்த 9 பேரும் எகிப்தின் கெய்ரோ விமான நிலையம் ஊடாக இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதை உறுதிப்படுத்தியுள்ளார்.
இந்தக் குழுவினர் துபாய் ஊடாகப் பயணித்து, இன்று (16) மாலை கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தைச் சென்றடைய உள்ளனர். வெளிநாடுகளில் பணியாற்றும் இலங்கையர்கள் அந்தந்த நாடுகளின் சட்டதிட்டங்களைச் சரியாகப் பின்பற்ற வேண்டும் என்பதையும், சட்டவிரோதமாகத் தங்கியிருப்பதைத் தவிர்க்க வேண்டும் என்பதையும் இந்தச் சம்பவம் மீண்டும் ஒருமுறை வலியுறுத்தியுள்ளது.