உஸ்வெட்டகெய்யாவ, தல்தியவத்த பகுதியில் உள்ள எரிவாயு இறக்குமதி துறைக்கு இன்று (18) அதிகாலை திரவ பெட்ரோலிய எரிவாயு (LPG) ஏற்றிச் சென்ற இரண்டு கப்பல்கள் வந்தடைந்துள்ளன.
அவற்றிலிருந்து எரிவாயு இறக்கும் பணிகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இதற்கிடையில், எரிபொருள் ஏற்றிய மற்றொரு கப்பலும் இன்று காலை நாட்டை வந்தடைந்துள்ளது.
இந்நிலையில், நேற்று (17) நடைபெற்ற விசேட ஊடகச் சந்திப்பில் உரையாற்றிய ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க தெரிவித்ததாவது, மார்ச் மாதத்திற்குள் லிட்ரோ நிறுவனம் மூலம் 38,000 மெட்ரிக் டொன் LPG ஏற்கனவே நாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளதாகும்.
மேலும், அடுத்த இரண்டு நாட்களுக்குள் 33,000 மெட்ரிக் டன் LPG கொண்ட மற்றொரு கப்பல் நாட்டை அடையும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இதன் மூலம் நாட்டின் எரிவாயு விநியோகத்தை நிலைநிறுத்தவும், தற்போதைய தேவைகளை பூர்த்தி செய்யவும் முடியும் என ஜனாதிபதி தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில்:
“மார்ச் மாதத்திற்கான எரிவாயு தேவையானது 33,000 மெட்ரிக் டொன். ஆனால், தனியார் நிறுவனம் ஒன்று விநியோகத்தை பாதித்ததால், 38,000 மெட்ரிக் டொன் எரிவாயு ஓர்டர் செய்யப்பட்டது. அந்த அளவு முழுவதும் தற்போது கிடைத்துள்ளது.
சில அளவு சந்தைக்கு விடப்பட்டுள்ளது; சில எரிவாயு கொள்கலன்கள் உள்நாட்டு களஞ்சியங்களில் சேமிக்கப்பட்டுள்ளன; மேலும் சில மாலைத்தீவுகளில் மிதக்கும் களஞ்சியங்களில் வைத்திருக்கப்படுகின்றன.
மேலும், இன்னொரு கப்பல் ஆர்டர் செய்யப்பட்டுள்ளதால், நாளை அல்லது நாளை மறுநாள் 33,000 மெட்ரிக் டன் எரிவாயு கொண்ட கப்பல் வரவுள்ளது. எனவே எரிவாயு பற்றாக்குறை உருவாகாது.
அடுத்த எரிவாயு கப்பல் ஏப்ரல் 21 முதல் 23 வரை வர உள்ளது. அதனால் சந்தையில் நெருக்கடி ஏற்படும் அபாயம் குறைவாக உள்ளது.” என்று தெரிவித்தார்.