நிலக்கரி கொள்வனவில் இடம்பெற்றுள்ள ஊழல்கள் மற்றும் முறைகேடுகள் காரணமாக, எதிர்வரும் ஏப்ரல் மாதம் முதல் மின்சாரக் கட்டணம் சுமார் 1,900 ரூபாவிலிருந்து அதிகரிக்கப்படவுள்ளதாக முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க எச்சரிக்கை விடுத்துள்ளார்.
நிலக்கரி கொள்வனவில் இடம்பெற்றதாகக் கூறப்படும் பாரிய முறைகேடுகள் தொடர்பாக, தாம் இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் (Bribery Commission) முறைப்பாடு செய்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இந்த விவகாரத்தில் ஜனாதிபதிக்குத் தவறான தகவல்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தனது முகநூல் பதிவில் சுட்டிக்காட்டியுள்ளார்.
விதிமுறைகளை மீறி தரம் குறைந்த நிலக்கரி இறக்குமதி செய்யப்பட்டதால், இதுவரை சுமார் 2000 மில்லியன் ரூபா (2 பில்லியன்) இழப்பு ஏற்பட்டுள்ளதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. “இந்த ஊழல்களின் சுமையை ஆட்சியாளர்கள் ஏற்கப்போவதில்லை; மாறாக, எதிர்வரும் ஏப்ரல் 01 முதல் மின்சாரக் கட்டண அதிகரிப்பு ஊடாகப் பொதுமக்கள் தலையிலேயே இது சுமத்தப்படவுள்ளது,” என அவர் அதிரடியாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.
இந்தக் கட்டண உயர்வு குறிப்பாகக் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களை மிகக் கடுமையாகப் பாதிக்கும் என்றும், நாட்டின் எரிசக்தித் துறையில் முறையான முகாமைத்துவம் இல்லாததே இதற்குக் காரணம் என்றும் ரணவக்க மேலும் தெரிவித்துள்ளார்.