எயார்பஸ் விமானக் கொள்வனவு கொடுக்கல் வாங்கல்களின் போது, 2 மில்லியன் அமெரிக்க டொலரை இலஞ்சமாக கோரியமை மற்றும் பெற்றுக்கொண்டமை தொடர்பில் கைது செய்யப்பட்ட ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேனவை மீண்டும் விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இலஞ்ச ஊழல் ஒழிப்பு விசாரணை ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்ட இந்த வழக்கு இன்று கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது அவரை ஏப்ரல் 02 ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.
மேலும் எயார் பஸ் கொடுக்கல் வாங்கலில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு மூன்று சந்தர்ப்பங்களின் போது 60 மில்லியன் ரூபாய் வழங்கியதாக ஸ்ரீ லங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேன வெளிப்படுத்தியதாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.