சிக்கிய 20 வயது இளைஞன்.மஸ்கெலியா பகுதியில் பாடசாலை மாணவர்கள் மற்றும் இளைஞர்களைக் குறிவைத்து கஞ்சா கலந்த ‘மதனமோதக’ போதை மாத்திரைகளை விற்பனை செய்து வந்த 20 வயதுடைய இளைஞன் ஒருவன் நேற்று (19) பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மஸ்கெலியா நகரில் ஆயுர்வேத மூலிகை மருந்துக் கடை ஒன்றை நடத்தி வந்த இந்த இளைஞன், கடைக்கு வரும் மாணவர்களுக்கு ஒரு மாத்திரை பொதியை 250 ரூபாய் என்ற விலைக்கு இரகசியமாக விற்பனை செய்து வந்துள்ளான். இது குறித்து ஹட்டன் பிராந்திய சிரேஷ்ட பொலிஸ் கண்காணிப்பாளர்க்குக் கிடைத்த விசேட தகவலின் பேரில் இந்தச் சுற்றிவளைப்பு முன்னெடுக்கப்பட்டது.
உதவி பொலிஸ் கண்காணிப்பாளரின் மேற்பார்வையில் முன்னெடுக்கப்பட்ட இந்தச் சோதனையின் போது, கடையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 648 கஞ்சா கலந்த மதனமோதக பொட்டலங்கள் மீட்கப்பட்டன. இவற்றின் சந்தைப் பெறுமதி சுமார் 1,62,000 ரூபாய் என பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபரை மஸ்கெலியா பொலிஸார் ஊடாக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இச் சுற்றிவளைப்பை ஹட்டன் பிராந்திய ஊழல் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் முன்னெடுத்திருந்தனர்.