முறையான அனுமதிப்பத்திரமின்றி சுமார் 6 இலட்சம் ரூபா பெறுமதியான டீசலை லொறியில் கடத்திச் சென்ற சந்தேக நபர் ஒருவரை கொட்டாஞ்சேனை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
மேல் மாகாண புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்து, கொட்டாஞ்சேனை பொலிஸார் ஜோர்ஜ் ஆர். டி சில்வா மாவத்தையில் முன்னெடுத்த இரவு நேர ரோந்துப் பணியின் போது இந்தச் சோதனை நடத்தப்பட்டது. இதன்போது சந்தேகத்திற்கு இடமான முறையில் பயணித்த மூடிய லொறி ஒன்றை வழிமறித்துச் சோதனையிட்ட போதே இந்த டீசல் இருப்பு கண்டுபிடிக்கப்பட்டது.
லொறிக்குள் தலா 200 லீற்றர் கொள்ளளவு கொண்ட 10 பீப்பாய்களில் அடைக்கப்பட்டிருந்த மொத்தம் 2,000 லீற்றர் டீசல் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டது. இதன் சந்தைப் பெறுமதி 6 இலட்சம் ரூபாவுக்கும் அதிகம் என மதிப்பிடப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் நாவலப்பிட்டி பகுதியைச் சேர்ந்த 25 வயதுடைய இளைஞர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். குறித்த டீசல் தொகையை விற்பனைக்காகவே கடத்திச் சென்றதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.