2026 தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தனது தேர்தல் பணிகளை அதிரடியாக முடுக்கிவிட்டுள்ளது. கூட்டணி குறித்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ள விஜய், தனித்துப் போட்டியிடுவதில் உறுதியாக உள்ளார்.
சென்னை பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் இரண்டாம் கட்ட வேட்பாளர் நேர்காணல் நேற்று நடைபெற்றது. கட்சியின் பொதுச் செயலாளர் என். ஆனந்த் முன்னிலையில் நடைபெற்ற இந்தச் சந்திப்பில், 50 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் இறுதி செய்யப்பட்டுள்ளனர். ஏற்கனவே முதற்கட்டமாக 60 பேர் தேர்வு செய்யப்பட்ட நிலையில், தற்போது மொத்தம் 110 வேட்பாளர்கள் உறுதி செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
அதிமுக அல்லது பாஜகவுடன் தவெக கூட்டணி அமைக்கவுள்ளதாகப் பரவிய செய்திகளைத் அக்கட்சித் தலைமை திட்டவட்டமாக மறுத்துள்ளது. “எந்தத் தரப்புடனும், எந்த மட்டத்திலும் பேச்சுவார்த்தை நடத்தப்படவில்லை” என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தைத் தொடர்ந்து புதுச்சேரியிலும் தனித்துப் போட்டியிட விஜய் முடிவெடுத்துள்ளார். அங்குள்ள 30 தொகுதிகளுக்குமான வேட்பாளர் பட்டியலை விஜய் இன்று வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. திங்கட்கிழமை ஒரே நேரத்தில் அனைத்து வேட்பாளர்களும் வேட்புமனுத் தாக்கல் செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது.
முன்னாள் எம்.எல்.ஏ.க்கள், தொழிலதிபர்கள் மற்றும் இளைஞர்கள் என அனுபவமும் புதிய ரத்தமும் கலந்த ஒரு கலப்பு அணியை விஜய் உருவாக்கி வருவதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். வேட்புமனுத் தாக்கலுக்குப் பிறகு, விஜய் நேரடியாகக் களமிறங்கி ‘சூறாவளி’ பிரச்சாரத்தை முன்னெடுக்கவும் திட்டமிட்டுள்ளார்.