வரலாற்றுப் புகழ்மிக்க நானுஓயா, டெஸ்போட் கீழ்பிரிவு அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் வருடாந்த தேர்த்திருவிழாவை முன்னிட்டு, ஆயிரக்கணக்கான பக்தர்கள் பால்குடம் மற்றும் பறவைக் காவடி எடுத்துத் தங்களது நேர்த்திக்கடன்களைப் பக்திப் பரவசத்துடன் நிறைவேற்றினர்.


கடந்த வெள்ளிக்கிழமை (20) கொடியேற்றத்துடன் ஆரம்பமான இவ்வுற்சவத்தின் சிகர நிகழ்வுகள் நேற்று (21) சனிக்கிழமை நடைபெற்றன. அதிகாலை முதல் விசேட அபிஷேக ஆராதனைகள் இடம்பெற்றதுடன், அதனைத் தொடர்ந்து பக்தர்கள் அலகு குத்தி, பறவைக் காவடி மற்றும் பால்குடம் ஏந்தி வந்து அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்.

பெரும் எண்ணிக்கையிலான பக்தர்கள் தீ மிதித்துத் தங்களது பக்தியை வெளிப்படுத்தினர். மதிய வேளையில் நடைபெற்ற மகேஸ்வர பூஜையைத் தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.
திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் இன்று (22) ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது. அலங்கரிக்கப்பட்ட திருத்தேரில் விநாயகப் பெருமான், முருகப் பெருமான் மற்றும் ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆகிய மூர்த்திகள் நுவரெலியா – ஹட்டன் பிரதான வீதி வழியாக வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கவுள்ளனர். இதனைத் தொடர்ந்து பச்சை சாத்துதல் நிகழ்வு இடம்பெறும்.
நாளை (23): விளக்கு பூஜை, மாவிளக்கு பூஜை மற்றும் பொன் ஊஞ்சல், பூங்காவன பூஜைகள் நடைபெறவுள்ளன.
செவ்வாய்க்கிழமை (24): தீர்த்த உற்சவம் மற்றும் கரகம் வீதியுலா நடைபெற்று, கொடியிறக்கத்துடன் விழா இனிதே நிறைவுபெறும் என ஆலய நிர்வாகம் தெரிவித்துள்ளது.