கண்டி மறைமாவட்டத்திற்குட்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க தலவாக்கலை புனித பத்திரிசியார் ஆலயத்தின் 2026-ஆம் ஆண்டிற்கான வருடாந்த திருவிழா, நேற்று (22.03.2026) ஞாயிற்றுக்கிழமை பக்திப்பூர்வமாக நடைபெற்றது.
நேற்று காலை 10.00 மணியளவில் திருவிழா நிகழ்ச்சிகள் ஆரம்பமாகின. விழாவிற்கு வருகை தந்த அருட்தந்தையர்கள் மற்றும் அருட்சகோதரிகளை, நுவரெலியா சென்கிளயர் தமிழ் மகா வித்தியாலய மாணவர்களின் பேண்ட் வாத்திய இசை முழங்க, பங்கு மக்கள் உற்சாகத்துடன் வரவேற்று ஆலயத்திற்கு அழைத்துச் சென்றனர்.
மறைமாவட்டக் குருமுதல்வர் அருட்தந்தை எல்வின் பீட்டர் பெர்னாண்டோ அடிகளாரின் தலைமையில் இத்திருவிழா கூட்டுத் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது. “ஆண்டவர் உங்களுடன் இருக்கட்டும், அவருடைய ஒளி உங்களை வழிநடத்தட்டும்” எனும் புனித பத்திரிசியாரின் உயரிய சிந்தனைக்கு அமைவாகப் பிரசங்கங்கள் இடம்பெற்றன.
ஆலயப் பங்குத்தந்தை அருட்பணி ஜேசுதாசன் அடிகளார்,உதவிப் பங்குத்தந்தை அருட்பணி ரன்ஜித லக்ஷான் அடிகளார்,மறைமாவட்டத்தின் மூத்த குருவான அருட்பணி பாலா ராஜேந்திரம் அடிகளார்மற்றும் அருட்சகோதரிகள் உட்பட நாட்டின் பல பாகங்களிலிருந்தும் வருகை தந்த பெருந்திரளான இறைமக்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
விழாவின் நிறைவில் விசேட ஆசீர்வாத நிகழ்ச்சிகள் இடம்பெற்றன. தொடர்ந்து, கலந்துகொண்ட அனைத்து பக்தர்களுக்கும் ஆலயப் பங்கு மக்களின் ஏற்பாட்டில் மதிய உணவு (அன்னதானம்) வழங்கப்பட்டது.