கிளிநொச்சி மாவட்டம் பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர் பிரிவில் இயக்கச்சி முகாவில் பகுதியில் உள்ள தமிழ் மக்களுக்கு சொந்தமான பூர்வீக காணிகளை இராணுவ தேவைக்காக அளவீடு செய்ய முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில், அதற்கு எதிராக காணி உரிமையாளர்கள் மற்றும் பொதுமக்கள், மக்கள் பிரதிநிதிகள் இணைந்து கடும் எதிர்ப்பை வெளியிட்டு போராட்டம் ஒன்றினை மேற்கொண்டுள்ளனர்.
இதன் காரணமாக காணி சுவீகரிப்பதற்கான நில அளவை பணிகள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.
18 பேருக்கு சொந்தமான பல ஏக்கர் காணிகளில் 4ஆவது பட்டாலியன், மின் மற்றும் இயந்திர பொறியியல்படையணியின் இராணுவ முகாமாக பயன்படுத்தப்பட்டு வரும் இந்த காணிகள், இப்பிரதேச தமிழ் மக்களின் பாரம்பரிய பரம்பரைச் சொத்தாகும். மேலும், அந்தப் பகுதியில் முத்துமாரி அம்மன் ஆலயம், பொது நோக்கு மண்டபம் மற்றும் சிறுவர் முன்பள்ளி போன்ற முக்கிய சமூக கட்டிடங்களும் அமைந்துள்ளன.
இக்காணியை இராணுவ தேவைக்காக சுவீகரிக்கவும், அதனை அளவீடு செய்யவும் இன்று (02) நில அளவை அதிகாரிகள் வருகை தருவதாக கடிதம் மூலம் தமக்கு ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளதாக காணி உரிமையாளர்களான மக்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த சுவீகரிப்பு அளவீடு நடவடிக்கைகளுக்கு எதிராகவும் தமது காணிகளை மீள தம்மிடம் ஒப்படைக்குமாறு வலியுறுத்தியும் காணி உரிமையாளர்கள், கடந்த 16 ஆண்டுகளாக தொடர்சியாக போராடி வருகின்றனர்.
இந்த நிலையில் இன்று மீண்டும் காணிகளை அளவீடு செய்து இராணுவத்தினரின் பயன்பாட்டுக்காக சுவீகரிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில் இராணுவ முகாமாக பயன்படுத்தப்பட்டாலும், தங்களது பாரம்பரிய காணியை சுவீகரிக்கவோ அல்லது அளவீடு செய்யவோ எந்தவித சம்மதமும் வழங்கமாட்டோம் என உறுதியாக தெரிவித்து காணி உரிமையாளர்கள் தமது எதிர்ப்பை தெரிவித்தனர் .
மேலும், “மக்களின் காணிகள் மக்களுக்கே வழங்கப்படும்” என்ற ஜனாதிபதி வாக்குறுதிகள் வழங்கப்பட்டிருந்த நிலையில், அவை பொய்யாகி விட்டதோ என மனவேதனைக்குள்ளாகியுள்ளதாகவும் போராட்டத்தில் ஈடுபட்ட காணி உரிமையாளர்கள் தெரிவித்தனர் .