இங்கிலாந்தில் 2022 ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்கச் சென்று, மீண்டும் இலங்கைக்குத் திரும்பாமல் அரசுக்கு சுமார் ஒரு கோடி ரூபாய் நட்டத்தை ஏற்படுத்தியதாகக் கூறப்படும் சம்பவத்துடன் தொடர்புடைய 10 விளையாட்டு வீரர்களுக்கு கொழும்பு நீதிவான் நீதிமன்றம் வெளிநாட்டுப் பயணத் தடை விதித்துள்ளது.

விளையாட்டு மோசடிகளைத் தடுப்பதற்கான சிறப்பு விசாரணைப் பிரிவு விடுத்த வேண்டுகோளைப் பரிசீலித்த கொழும்பு பிரதான நீதவான் அஸங்க எஸ்.போதரகம இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.

சந்தேகநபர்களான இந்த 10 விளையாட்டு வீரர்களுக்கு எதிராக சிவப்பு அறிவித்தல் பிறப்பிக்கப்பட உள்ளதாகவும் விசாரணைப் பிரிவு நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளது.

அசேல டி சில்வா, சமிளா திலானி, எஸ்.சத்துரங்க, ஒய்.நிக்லஸ், அஷேன் ரஷ்மிகா எஸ்.மாலிந்த, ஸ்ரீயந்திகா பெர்னாண்டோ, சஞ்சீவ ராஜகருண, ஜீவந்த விமுக்தி குமார ஆகிய வீரர், வீராங்கனைகள் உள்ளிட்டோர் மீது விசாரணை நடத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

2019 ஆம் ஆண்டின் 24 ஆம் இலக்க விளையாட்டு ஊழல் தடுப்புச் சட்டத்தின் 5 மற்றும் 6 ஆம் பிரிவுகளின் கீழ் சந்தேகநபர்கள் மீது குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளதாக விசாரணை அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த விளையாட்டுப் போட்டிக்கு இலங்கை சார்பில் 116 விளையாட்டு வீரர்கள் கலந்துகொண்ட நிலையில், அவர்களில் மல்யுத்த வீரர்கள் 3 பேர், ஜூடோ வீரர்கள் 2 பேர், குத்துச்சண்டை வீரர்கள் 2 பேர், மற்றும் கரப்பந்தாட்ட வீரர்கள் 2 பேர் உட்பட 10 பேர் நாடு திரும்பவில்லை என்று விசாரணை அதிகாரிகள் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.

இதன்போது, விசாரணையின் முன்னேற்றம் குறித்து நீதிமன்றத்திற்கு அறிக்கை சமர்ப்பிக்குமாறும் நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.