நிலவி வரும் சீரற்ற காலநிலையால் ஹட்டன் – பொகவந்தலாவ பிரதான வீதியில் பாரிய மரமொன்று முறிந்து வீழ்ந்துள்ளது.
இதனால் குறித்த பகுதியில் சுமார் ஒரு மணிநேரம் போக்குவரத்து தடைப் பட்டிருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் ஹட்டன் – மஸ்கெலியா, ஹட்டன் – பொகவந்தலாவ ஆகிய வீதிகளுடனான போக்குவரத்து தடைப்பட்டிருந்தமையினால், குறித்த வீதியின் ஊடாக பயணித்தவர்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்க நேரிட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த சம்பவத்தில், முறிந்து வீழ்ந்த மரம் மின்சார கம்பத்தில் வீழ்ந்தமையினால், 2 மின்சார கம்பங்கள் சேதமடைந்துள்ளதோடு குறித்த பகுதிக்கான மின்சாரம் தடைப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை பிரதேச மக்கள் இணைந்து மரத்தினை அகற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதோடு,மின்சார கம்பங்களைச் சீர் செய்யும் நடவடிக்கையினை மின்சார சபையினர் மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த சம்பவத்தில் யாருக்கும் காயங்கள் எதுவும் ஏற்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.