போர்த்துகல் அணியின் நட்சத்திர வீரரும், உலக கால்பந்து ஜாம்பவானுமான கிறிஸ்டியானோ ரொனால்டோ, 2026 ஆம் ஆண்டு நடைபெறும் உலகக் கிண்ணத் தொடரே தனது கடைசிப் போட்டியாக இருக்கும் என்று அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளார்.
சவுதி அரேபியாவின் ரியாத்தில் நடந்த ‘Tourise Summit’ மாநாட்டில் இது குறித்துப் பேசிய 40 வயதான ரொனால்டோ, இன்னும் “ஓரிரு ஆண்டுகளில்” கால்பந்தில் இருந்து ஓய்வு பெறப் போவதாகவும் அறிவித்துள்ளார்.
2026 ஆம் ஆண்டில் கனடா, மெக்சிகோ மற்றும் அமெரிக்காவில் நடைபெறும் உலகக் கிண்ணம் பற்றி கேட்கப்பட்டபோது, ரொனால்டோ, “நிச்சயமாக, ஆம். எனக்கு அப்போது 41 வயதாக இருக்கும், அதுவே பெரிய போட்டிகளில் பங்கேற்கும் சரியான தருணம் என்று நினைக்கிறேன்,” என்று உறுதிப்படுத்தினார்.
இது ரொனால்டோ பங்கேற்கும் ஆறாவது உலகக் கிண்ணமாக இருக்கும்.போர்த்துகல் அணி இதுவரை அடுத்த ஆண்டுக்கான உலகக் கிண்ணத்துக்கு தகுதி பெறவில்லை என்றாலும், வியாழக்கிழமை அயர்லாந்துக்கு எதிராக வென்றால், தகுதி பெறுவது உறுதியாகிவிடும்.கழகம் மற்றும் நாட்டு அணிகளுக்காக இதுவரை 953 கோல்களை அடித்துள்ள கிறிஸ்டியானோ ரொனால்டோ, 1000 கோல்கள் என்ற மைல்கல்லை எட்டுவதில் தீவிரமாக உள்ளார்.
சர்வதேச அளவில் சொந்த அணிக்காக அதிக கோல்கள் (143) அடித்த வீரர் என்ற சாதனையை அவர் ஏற்கனவே தன்வசம் வைத்துள்ளார்.கடந்த வாரம் “விரைவில்” ஓய்வு பெறுவதாகக் கூறிய அவர், நேற்று அந்த காலக்கெடுவை உறுதிப்படுத்தினார்.
தற்போது சவூதி அரேபியாவின் அல்-நஸ்ர் (Al-Nassr) கழகத்துக்காக அவர் விளையாடி வருகிறார்.இதேவேளை, ஐந்து முறை பலோன் டி’ஓர் (Ballon d’Or) விருது வென்ற ரொனால்டோ, 2016 ஆம் ஆண்டு யூரோ கிண்ணத்தை போர்த்துக்கலுக்கு வென்று கொடுத்தார்.இருப்பினும், உலகக் கிண்ணம் மட்டுமே அவரது சாதனைப் பட்டியலில் இல்லாத முக்கிய கிண்ணமாக உள்ளது