ஒரு பணக்கார நகரத்தில் அழகான வாழ்க்கையை உருவாக்கும் உறுதிப்பாட்டிலிருந்து ஒருபோதும் பின்வாங்கப்போவதில்லை” என கொழும்பு மேயர் திருமதி வராய் கலி பல்தசார் தெரிவித்துள்ளார். அவர் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவொன்றை இட்டு இதனைத் தெரிவித்துள்ளார்.
கொழும்பு மாநகர சபையின் வரவு செலவுத் திட்டத்தின் (Budget) இரண்டாம் வாசிப்பு எதிர்வரும் 31ஆம் திகதி நடைபெறவுள்ளது. எனவே, வரவு செலவுத் திட்டம் குறித்து நீங்கள் அறியாத சில விடயங்கள் மற்றும் அதன் வெளிப்படைத்தன்மை குறித்து தெளிவுபடுத்துவது எனது பொறுப்பாகக் கருதுகிறேன்.
சபையொன்றின் வரவு செலவுத் திட்டம் என்பது வெறும் இலக்கங்களின் விளையாட்டு அல்ல. அது நாம் முன்னெடுக்கும் பணிகளின் முன்னேற்றம் மற்றும் அடுத்த ஆண்டிற்கான திட்டங்களை முன்வைக்கும் ஒரு ஆவணமாகும்.
கடந்த 2023/24 ஆம் ஆண்டில் சபை இயங்கவில்லை. ஆணையாளர் ஆட்சியின் கீழ் முன்வைக்கப்படும் வரவு செலவுத் திட்டத்திற்கும், ஒரு சபையினால் முன்வைக்கப்படும் வரவு செலவுத் திட்டத்திற்கும் இடையே பாரிய வித்தியாசம் உள்ளதுடன், அதன் செயல்முறை மிகவும் சிக்கலானது.
இந்த ஒட்டுமொத்த சிக்கலான செயல்முறைக்கு மத்தியிலும், மக்கள் நலன் சார்ந்த வரவு செலவுத் திட்டத்தை முன்வைப்பதே சபையின் அனைத்து உறுப்பினர்களினதும் எதிர்பார்ப்பாகும். எமது வரவு செலவுத் திட்டத்தை தயாரிக்கும் போது நாம் பின்பற்றிய வழிமுறைகளை கொழும்பு குடிமக்களாகிய நீங்கள் அறிந்துகொள்ள வேண்டும் என நான் நினைக்கிறேன்.
எமது சபை பதவியேற்று சில வாரங்களிலேயே இந்த வரவு செலவுத் திட்ட பணிகளை ஆரம்பித்தோம். மேயர் என்ற ரீதியில், ஜூலை மாதத்தில் மாநகர சபையின் 16 நிறுவனங்களுக்கும் தத்தமது முன்மொழிவுகளை வழங்குமாறு அறிவுறுத்தினேன். இந்த முன்மொழிவுகளை வழங்குவதற்கான வாய்ப்பு ஆகஸ்ட் மாதம் வரை திறந்திருந்தது. நிறுவனங்களுக்கு மேலதிகமாக, ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அனைவருக்கும் தமது முன்மொழிவுகளை வழங்க சந்தர்ப்பம் வழங்கப்பட்டது. இந்த முன்மொழிவுகள் அனைத்தையும் கட்சி பேதமின்றி குடிமக்களின் நலன் கருதி நாம் பரிசீலித்தோம்.
நாங்கள் இன்னுமொரு விசேட விடயத்தைச் செய்தோம் — இம்முறை நிறுவனத் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்களுக்கு மேலதிகமாக, எமது ஊழியர்களுக்கும் எழுத்துப்பூர்வமாக முன்மொழிவுகளை வழங்க சந்தர்ப்பம் வழங்கினோம். எமது இந்த புதிய அரசியல் கலாசாரத்தில் இது ஒரு சிறப்பான வெற்றியாக நான் கருதுகிறேன்.
இந்த செயல்முறையின் கடினமான கட்டம் என்னவென்றால், இந்த முன்மொழிவுகளுக்குத் தேவையான நிதி நிலைமைகள் குறித்து கலந்துரையாடி உடன்பாடுகளுக்கு வருவதாகும்.
இந்த செயல்முறை நவம்பர் மாதம் வரை நீடித்தது. அதன் பிறகு குறைபாடுகள் மற்றும் திருத்தங்கள் குறித்த மீளாய்வு இடம்பெற்றது.
இவை அனைத்தின் முடிவில், இந்த வரைவு வரவு செலவுத் திட்டம் அச்சிடப்பட்டு, மீண்டும் 23 நிலையியற் குழுக்களின் கீழ் கலந்துரையாடப்பட்டது. இந்தச் செயல்முறையில் ஆளும் மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அனைவரும் ஜனநாயக ரீதியாகப் பங்கேற்றனர்.
இந்த வரைவை பொதுமக்கள் பார்வையிட ஏழு நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டது — இது தொடர்பாக சட்டத்திற்கு அமைவாக மூன்று மொழிகளிலும் மூன்று பிரதான பத்திரிகைகள் ஊடாக உங்களுக்கு அறிவித்தோம். அரசியலமைப்பிற்கு அமைவாக இதன் பிரதிகள் பொது நூலகத்திலும் எமது மாநகர பொருளாளரிடமும் வைக்கப்பட்டிருந்தன.
இறுதியாக, ஆளும் மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அங்கம் வகிக்கும் இரு நிதிக் குழுக்களிடம் இந்த முன்மொழிவுகள் சமர்ப்பிக்கப்பட்டன. இந்த சந்தர்ப்பத்தில் பெறுமதிகள் மற்றும் பிழைகளைத் திருத்துவதற்கு வாய்ப்பு வழங்கப்பட்டது.
இந்த செயல்முறையின் ஊடாக திருத்தப்பட்ட எமது வரவு செலவுத் திட்டத்தை, சபை அங்கீகரிப்பதற்காக 22.12.2025 அன்று நான் சபையில் சமர்ப்பித்தேன்.
“ஒரு பணக்கார நகரத்தில், அழகான வாழ்க்கையை” உருவாக்கும் உறுதிப்பாட்டிலிருந்து ஒருபோதும் பின்வாங்கப்போவதில்லை.