BREAKING NEWS

நன்கொடையாக கிடைத்த மருத்துவ உபகரணங்கள் பயன்பாடின்றி முடங்கிக் கிடப்பதாக தகவல்

PR
priya priya punidha in Latest Updates
Report
நன்கொடையாக கிடைத்த மருத்துவ உபகரணங்கள் பயன்பாடின்றி முடங்கிக் கிடப்பதாக தகவல்

வெளிநாடுகளில் இருந்து நன்கொடையாக இலங்கைக்குக் கிடைத்த 2,000 க்கும் அதிகமான மருத்துவ உபகரணங்கள், நாட்டின் மருத்துவமனைக் கட்டமைப்பில் பயன்படுத்தப்படாமல் முடங்கிக் கிடப்பதாக சுகாதாரத் திணைக்கள வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

இந்த உபகரணங்களைப் பயன்படுத்துவதற்கு அதிக செலவு ஏற்படுகின்றமை மற்றும் அவை இலங்கையின் மருத்துவமனைக் கட்டமைப்புக்கு பொருத்தமற்றதாக உள்ளமையே இதற்குக் காரணம் என சுகாதார அமைச்சின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். 

மகரகம புற்றுநோய் மருத்துவமனைக்கு நன்கொடையாகக் கிடைத்த சுமார் 48 கோடி ரூபாய் பெறுமதியான மரபணு பகுப்பாய்வு இயந்திரம், அதற்குத் தேவையான மூலப்பொருள்கள் இல்லாத காரணத்தால் கடந்த 6 ஆண்டுகளுக்கும் மேலாகப் பயன்படுத்தப்படாமல் உள்ளது. 

பயன்படுத்தப்படாவிட்டாலும், குறித்த இயந்திரத்தைப் பராமரிப்பதற்காக ஆண்டுதோறும் பெருமளவிலான நிதி செலவிடப்படுகின்றது. 

இது குறித்துக் கருத்துத் தெரிவித்த சுகாதார பிரதி அமைச்சர் மருத்துவர் ஹங்சக விஜேமுனி, மகரகம புற்றுநோய் வைத்தியசாலையின் இயந்திரம் தொடர்பாக ஆசிய அபிவிருத்தி வங்கியிடம் அறிக்கை கோரப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார். 

கடந்த காலங்களில் உரிய திட்டமிடல் இன்றிப் பொறுப்பேற்கப்பட்ட இவ்வாறான உபகரணங்களால் பாரிய நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும், இனிவரும் காலங்களில் நாட்டின் சுகாதாரக் கட்டமைப்புக்குப் பொருத்தமான உபகரணங்களை மட்டுமே உறுதிப்படுத்திய பின்னர் பொறுப்பேற்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பிரதி அமைச்சர் உறுதியளித்தார்.