முல்லைத்தீவு – கரைதுறைப்பற்று பிரதேசசெயலாளர் பிரிவிற்குட்பட்ட வலைஞர்மடம் கிராமத்திற்கு செல்வதற்கான பிரதான வீதிகள் மற்றும் கிராமத்திலுள்ள உள்ளக வீதிகள் என்பன சீரின்மையால் குறித்த வலைஞர்மடம் கிராமம் தனித்தீவாக மாறியுள்ளதாக அந்தக் கிராமமக்களால் வன்னி நாடாளமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரனிடம் முறையிட்டுள்ளனர்.

இந்நிலையில் கிராமமக்களின் முறையீட்டினைத் தொடர்ந்து நாடாளமன்றஉறுப்பினர் ரவிகரன் நேற்று (16) வலைஞர்மடம் கிராமத்திற்கு நேரடியாகச் சென்று நிலைமைகள் தொடர்பில் ஆராய்ந்துள்ளார்.

அந்தவகையில் புதுக்குடியிருப்பு முல்லைத்தீவு A-35 பிரதான வீதியிலிருந்து வலைஞர்மடத்திற்கு வருகைதரும் மாதா சந்தி வீதி மிகமோசமாகப் பாதிக்கப்பட்டிருப்பதை இதன்போது கிராமமக்கள் நாடாளமன்ற உறுப்பினரது கவனத்திற்கு கொண்டுவந்தனர். ஏதேனும் அனர்த்தம் ஏற்பட்டால் மக்கள் கிராமத்தைவிட்டு வெளியேறும் பிரதான மார்க்கமாக குறித்த வீதியே காணப்படுவதாகவும் இதன்போது மக்களால் நாடாளமன்றஉறுப்பினரிடம் தெரியப்படுத்தப்பட்டது.

அந்தவகையில் குறித்த வலைஞர்மடம் மாதாசந்தி வீதி சீரின்றிக் காணப்பட்டதால் அண்மையில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தத்தின்போதும் படகுகளின்மூலமே மக்கள் கிராமத்தை விட்டு வெளியேறும் நிலை ஏற்பட்டதாகவும், இவ்வீதி சீரின்றிக்காணப்படுவதால் இந்த வலைஞர்மடம் கிராமம் தனித்து விடப்பட்ட தீவாக மாறியுள்ளதாகவும் கிராம மக்களால் இதன்போது ரவிகரன் எம்.பியிடம் தெரியப்படுத்தப்பட்டது.

எனவே தமது நிரையைக் கருத்திற்கொண்டு குறித்த வீதியை சீரமைப்பதற்கு விரைந்து நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் இன்போது நாடாளமன்றஉறுப்பினரிடம் கிராமமக்கள் கோரிக்கை விடுத்தனர். அத்தோடு பொக்கணை வலைஞர்மடம் இணைப்புவீதி, வலைஞர்மடம் சவக்காலை வீதி உள்ளிட்ட உள்ளக வீதிகளின் சீரமைப்புத் தொடர்பிலும் இதன்போது நாடாளமன்ற உறுப்பினரிடம் கிராமமக்களால் கோரிக்கைவிடுக்கப்பட்டது.

மேலும் இதன்போது வலைஞர்மடத்தில் சுற்றுலா கடற்கரை ஒன்றினை ஏற்படுத்துவது தொடர்பிலும் இதன்போது கிராமமக்களால் நாடாளமன்ற உறுப்பினரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இந்நிலையில் வலைஞர்மடம் கிராமமக்களின் கோரிக்கைகளை கேட்டறிந்துகொண்ட நாடாளமன்ற உறுப்பினர் ரவிகரன், எழுத்துமூலமாக தம்மிடம் கோரிக்மைகளைக் கையளிக்குமாறு தெரிவித்ததுடன், மக்களால் விடுக்கப்பட்ட கோரிக்கைகளை உரிய இடங்களுக்கு கொண்டு சென்று அக்கோரிக்கைகளை நிறைவேற்றுவது தொடர்பில் தம்மால் கவனஞ்செலுத்தப்படுமெனத் தெரிவித்துள்ளார்.

குறித்த களவிஜயத்தில் கரைதுறைப்பற்று பிரதேசசபை உறுப்பினர் ஜோசெப் மாசிலாமணியும் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை சினிமா