அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கத்தினால் அக்கரைப்பற்று ஆதார மருத்துவமனையில் முன்னெடுக்கப்பட்டு வரும் வேலைநிறுத்தப் போராட்டம் நியாயமற்றது என சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று (21) உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இந்த விளக்கத்தை அளித்தார்.
அக்கரைப்பற்று ஆதார மருத்துவமனையின் தற்போதைய மருத்துவ அத்தியட்சகரை பதவியிலிருந்து நீக்குமாறே வைத்திய அதிகாரிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
குறித்த மருத்துவ அத்தியட்சகரின் நியமனம் அரச சேவை ஆணைக்குழுவின் அனுமதியுடன் வழங்கப்பட்டுள்ளது.
எனவே, ஆரம்பகட்ட விசாரணைகள் நிறைவடைவதற்கு முன்னர் அவரை தன்னிச்சையாக பதவியிலிருந்து நீக்க முடியாது என அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
தற்போது இது தொடர்பான விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.
விசாரணைகளில் அவர் குற்றவாளியாகக் காணப்படும் பட்சத்தில் மட்டுமே அமைச்சு நடவடிக்கை எடுக்க முடியும்.
அவ்வாறின்றி அவசரமாக எடுக்கப்படும் முடிவுகள் அதிகாரிகளுக்கு எதிராக சட்டச் சிக்கல்களை உருவாக்கும்.
கிழக்கு மாகாண மக்களைப் பாதிப்புக்குள்ளாக்கும் வகையில், ஒரு தனி நபரை நீக்குவதற்காக முன்னெடுக்கப்படும் இந்த வேலைநிறுத்தம் மிகவும் அநீதியானது என தான் கருதுவதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.