கிரீன்லாந்து தீவை வாங்குவது தொடர்பாக ஐரோப்பிய நாடுகளுக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் விடுத்திருந்த மிரட்டல்கள் மற்றும் வர்த்தகப் போர் அச்சம் தற்போது தணிந்துள்ளது. 

பிரஸ்ஸல்ஸில் நடைபெற்ற அவசர உச்சிமாநாட்டில் ஐரோப்பிய ஒன்றியத் தலைவர்கள் இது குறித்துக் கலந்துரையாடியதுடன், அமெரிக்காவுடனான எதிர்கால உறவு குறித்து முக்கிய கருத்துக்களைப் பகிர்ந்துள்ளனர். 

கிரீன்லாந்து தீவை அமெரிக்காவுடன் இணைப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்த டென்மார்க், பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளுக்கு 25 வீதம் வரை வரி விதிப்பதாக ட்ரம்ப் முன்னர் எச்சரித்திருந்தார். 

இருப்பினும், டாவோஸ் நகரில் நடைபெற்ற உலகப் பொருளாதார மன்றத்தில் ட்ரம்ப் தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டு, கிரீன்லாந்து தொடர்பாக ஒரு இணக்கமான தீர்வு எட்டப்பட்டுள்ளதாக அறிவித்தார். 

வியாழக்கிழமை மாலை நடைபெற்ற அவசர உச்சிமாநாட்டின் பின்னர் ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவர் உர்சுலா வொன் டெர் லேயன் கூறுகையில், நாங்கள் உறுதியாக நின்றதன் மூலமே இந்த வெற்றியைப் பெற்றுள்ளோம். 

அமெரிக்கா மீண்டும் மிரட்டல் விடுத்தால், அதற்குப் பதிலடி கொடுக்க ஐரோப்பிய ஒன்றியம் தனது அனைத்து பொருளாதார ஆயுதங்களையும் பயன்படுத்தத் தயாராக உள்ளது என அவர் எச்சரித்தார். 

அமெரிக்காவுடனான அத்திலாந்திக் கடல்கடந்த உறவு கடந்த ஒரு வாரத்தில் பெரும் பாதிப்பைச் சந்தித்துள்ளது என ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளியுறவுக் கொள்கைத் தலைவர் காஜா கலாஸ் தெரிவித்தார். 

அமெரிக்காவை ஒரு நம்பகமான கூட்டாளியாக இனி பார்க்க முடியாது என்றும், ஐரோப்பா தனது தற்காப்பு மற்றும் பொருளாதாரத் தேவைகளில் தன்னாட்சி அடைய வேண்டியது அவசியம் என்றும் தலைவர்கள் வலியுறுத்தினர். 

டொனால்ட் ட்ரம்பின் மிரட்டல்களால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஐரோப்பிய ஒன்றிய – அமெரிக்க வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்குவதற்குத் தலைவர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர். 

ட்ரம்ப் எப்போது வேண்டுமானாலும் தனது முடிவை மாற்றக்கூடியவர் என்பதால், ஐரோப்பிய நாடுகள் தொடர்ந்து விழிப்புடன் இருக்க முடிவு செய்துள்ளன. 

குறிப்பாக, 93 பில்லியன் யூரோ மதிப்பிலான அமெரிக்க இறக்குமதிகள் மீது வரி விதிக்கத் தயாராக வைக்கப்பட்டிருந்த பசூக்கா தடைகளைத் தற்காலிகமாகவே ஐரோப்பா நிறுத்தி வைத்துள்ளது.

இலங்கை சினிமா