இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் சர்வதேசப் போட்டியில் இலங்கை அணி 19 ஓட்டங்களால் வெற்றி பெற்றதை அடுத்து, ஆட்டநாயகன் விருது வென்ற இலங்கை அணியின் சகலதுறை ஆட்டக்காரர் துனித் வெல்லாலகே, மறைந்த தனது தந்தைக்கு உணர்ச்சிகரமான அஞ்சலி செலுத்தினார்.
வெல்லாலகே பந்துவீச்சில் 41 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளை வீழ்த்தியதுடன், துடுப்பாட்டத்தில் 12 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 25 ஓட்டங்களை எடுத்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
இதன் மூலம் இலங்கை அணி 271 ஓட்டங்களை பெற்று மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என முன்னிலை பெற உதவியது.
இது குறித்துப் பேசிய வெல்லாலகே, தான் ஆசியக் கிண்ணப் போட்டிகளில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்திய காலத்தில் காலமான தனது தந்தைக்கு இந்த விருதை சமர்ப்பிப்பதாகத் தெரிவித்தார்.
போட்டிக்குப் பின்னரான ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் கூறுகையில், “இந்த விருதை எனது தந்தைக்கு சமர்ப்பிக்கிறேன்.
அவர் எங்கிருந்தோ என்னைப் பார்த்துக் கொண்டிருப்பார் என்று எனக்குத் தெரியும். நான் நாட்டுக்காகச் சிறப்பாக விளையாட வேண்டும் என்று அவர் எப்போதும் விரும்புவார், எனக்கு ஆதரவாகவும் இருந்தார்,” என்றார்.
கடந்த சில மாதங்கள் தனிப்பட்ட ரீதியில் தனக்கு மிகவும் கடினமான காலமாக இருந்தது. அந்த நேரத்தில் தனக்கு ஆதரவளித்த சுழற்பந்து வீச்சு பயிற்சியாளர் சச்சித் பத்திரனவுக்கு நன்றி என வெல்லாலகே தெரிவித்தார்.