BREAKING NEWS

மண்சரிவு அபாயம் காரணமாக மூடப்பட்டிருந்த நாவலப்பிட்டி அனுருத்த குமார ஆரம்பப் பாடசாலையை மீளவும் திறக்கப்பட்டது

PR
priya priya punidha in Latest Updates
Report
மண்சரிவு அபாயம் காரணமாக மூடப்பட்டிருந்த நாவலப்பிட்டி அனுருத்த குமார ஆரம்பப் பாடசாலையை மீளவும் திறக்கப்பட்டது

மண்சரிவு அபாயம் காரணமாக கடந்த 02 மாதங்களாக மூடப்பட்டிருந்த நாவலப்பிட்டி அனுருத்த குமார ஆரம்பப் பாடசாலையை மீளவும் திறப்பதற்கு பரிந்துரை வழங்கப்பட்டுள்ளது.
தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் அதற்கான பரிந்துரையை வழங்கியுள்ளது.

கடந்த நவம்பர் 27 ஆம் திகதி இலங்கையில் ஏற்பட்ட டித்வா புயலின் தாக்கத்தால் இப்பாடசாலைக்கு மேலே அமைந்துள்ள ஸ்ரீ கவீஷ்வர வேலுவனாராம விகாரையின் பாதுகாப்பு மதில் மண்சரிவுக்கு உள்ளானது.

தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனத்தின் பரிந்துரையின் பேரில் சுமார் இரண்டு மாத காலமாக பாடசாலை மூடப்பட்டிருந்தது.

பாடசாலை மூடப்பட்ட நிலையில் பெற்றோர்களுக்கும் கல்வி அதிகாரிகளுக்கும் இடையில் கடும் கருத்து முரண்பாடுகள் ஏற்பட்டிருந்தன. அரசியல் முரண்பாடுகள் காரணமாகவே, சரிந்து விழுந்த மண் மேட்டை அகற்றி பாடசாலையை மீண்டும் திறக்கவில்லை என பெற்றோர்கள் குற்றம் சுமத்தியிருந்தனர்.

அதற்கமைய, இன்று குறித்த இடத்தை மீண்டும் ஆய்வு செய்த புவிச் சரிதவியல் மற்றும் சுரங்கப் பணியகத்தின் புவிச் சரிதவியல் அதிகாரி சமந்த போகஹபிட்டிய, பாடசாலையை மீண்டும் ஆரம்பிப்பதற்குத் தேவையான வழிகாட்டல்களை வழங்கினார்.