கல்விச் சீர்திருத்தங்கள் முறையாக நடைமுறைப்படுத்தப்பட்டால், அதற்குத் தனது முழுமையான ஆதரவை வழங்கத் தயார் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
தரம் 6 க்கான கல்விச் சீர்திருத்தங்கள் நடைமுறைப்படுத்தப்படாததால், இலட்சக்கணக்கான மாணவர்களும் பெற்றோர்களும் பெரும் ஏமாற்றமடைந்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
கல்விச் சீர்திருத்தங்கள் நிறுத்தப்பட்டதற்கான பழியை எதிர்க்கட்சியின் மீது சுமத்த அரசாங்கம் முயற்சிப்பதாகவும், ஆனால் தற்போதைய ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கமே இதனை இடைநிறுத்தியுள்ளதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
கல்வித் துறை நிபுணர்களுடன் கலந்துரையாடி, தேவையற்ற அல்லது பொருத்தமற்ற பகுதிகளை நீக்கிவிட்டு, இந்த ஆண்டிலேயே முறையான சீர்திருத்தங்களை விரைவாக அமுல்படுத்துமாறு அவர் அரசாங்கத்தைக் கேட்டுக்கொண்டார்.
இது குறித்து முறையான பேச்சுவார்த்தை நடத்தப்படுமானால், எதிர்க்கட்சியின் கருத்துக்களை முன்வைக்கவும், சீர்திருத்தங்களைச் சரியாகச் செயல்படுத்த ஒத்துழைப்பு வழங்கவும் தாம் தயாராக இருப்பதாக அவர் மேலும் வலியுறுத்தினார்.