இலங்கையில் திரவப்பால் (Fresh Milk) விற்பனை ஒரு மாஃபியாவாக மாறியுள்ளதாகவும், பால் உற்பத்தி நிறுவனங்கள் நுகர்வோரைச் சுரண்டுவதாகவும் தேசிய நுகர்வோர் முன்னணியின் தலைவர் அசேல சம்பத் குற்றம் சுமத்தியுள்ளதாக ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
அண்மைக்காலமாக அதிகமான நுகர்வோர், பால் மாவிலிருந்து திரவப்பாலுக்கு மாறியுள்ள நிலையில், அதிகரித்துள்ள கேள்விக்கு ஏற்ப நிறுவனங்கள் நியாயமற்ற முறையில் விலையை அதிகரித்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.
தற்போது பால் பண்ணையாளர்கள் ஒரு லீட்டர் திரவப்பாலை 160 முதல் 200 ரூபா வரையான விலைக்கு விற்பனை செய்கின்றனர், எனினும் ஒரு லீட்டர் பால் நுகர்வோருக்கு 430 முதல் 550 ரூபா வரையான விலையில் விற்பனை செய்யப்படுகிறது.
பண்ணை விலைக்கும் சில்லறை விற்பனை விலைக்கும் இடையே பாரிய விலை அதிகரிப்பு ஏற்படுவது எவ்வாறு நியாயமாகும் என அசேல சம்பத் கேள்வி எழுப்பியுள்ளார்.
இது தொடர்பில் விவசாய அமைச்சர் உடனடியாக தலையிட்டு நிலையான தீர்வை வழங்க வேண்டும் என்றும், காலாவதி திகதி மற்றும் தரக் கட்டுப்பாடுகளில் நிறுவனங்கள் அலட்சியமாக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.