கல்வி சீர்திருத்தங்கள் குறித்து ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் அவரது தரப்பினர் பொய்களையும் ஏமாற்று வித்தைகளையும் பரப்புவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கடுமையாகச் சாடியுள்ளார்.
தனது ‘X’ தளத்தில் பதிவிட்டுள்ள சஜித் பிரேமதாச, அரசாங்கத்தின் திறமையின்மை மற்றும் தோல்வியுற்ற கொள்கைகளே 6ஆம் தர கல்வி சீர்திருத்தங்கள் திடீரென நிறுத்தப்படக் காரணம் எனக் குற்றம் சுமத்தியுள்ளார்.
“பிள்ளைகளின் இலவசக் கல்வி உரிமையைப் பாதுகாப்பதற்காகப் போராடும் எங்கள் மீது, அரசாங்கம் இப்போது பழியைப் போட முயல்கிறது” என அவர் குறிப்பிட்டுள்ளார்.
“அனைத்து மக்களையும் எல்லா நேரத்திலும் ஏமாற்ற முடியாது என்பதை அநுரகுமார திசாநாயக்க புரிந்துகொள்ள வேண்டும்” என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
முன்னதாக இந்த சீர்திருத்தங்களை எதிர்த்த போதிலும், சரியான முறையில் முன்னெடுக்கப்பட்டால் அதற்கு ஒத்துழைப்பு வழங்கத் தயார் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
எதிர்க்கட்சித் தலைவரின் விமர்சனங்களுக்குப் பதிலளித்த ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, எதிர்க்கட்சியினர் தமது நிலைப்பாட்டை அடிக்கடி மாற்றிக்கொள்வதாக விமர்சித்தார்.
அத்துடன் “இந்த சீர்திருத்தங்களை ஆரம்பத்தில் கடுமையாக எதிர்த்த ஒரு நபர், இப்போது அது ஏன் நிறுத்தப்பட்டது என்று எங்களிடமே கேள்வி எழுப்புகிறார்” என ஜனாதிபதி, சஜித் பிரேமதாசவை மறைமுகமாகச் சாடினார்.
சீர்திருத்தங்கள் நிறுத்தப்பட்டதற்கான பழியை எதிர்க்கட்சி தன் மீது சுமத்துவதை ஜனாதிபதி நிராகரித்துள்ளார்.
இலங்கையில் 6ஆம் தர மாணவர்களுக்காக அறிமுகப்படுத்தப்படவிருந்த புதிய கல்வி சீர்திருத்தங்கள் இடைநிறுத்தப்பட்டமையே இந்த அரசியல் மோதலுக்கு முக்கிய காரணமாகும்.