மியன்மாரின் எல்லை நகரமான லாவ்க்காங்கில் பாரிய மோசடி மையங்களை நடத்தி வந்த பிரபல மிங் குடும்பத்தைச் சேர்ந்த 11 பேருக்கு சீனா மரண தண்டனை நிறைவேற்றியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 

மிங் குடும்பத்தினரின் மோசடி மற்றும் சூதாட்ட விடுதிகள் 2015 முதல் 2023 வரையான காலப்பகுதியில் சுமார் 10 பில்லியன் யுவான் (1.4 பில்லியன் டொலர்) வருமானத்தை ஈட்டியுள்ளதாகச் சீனாவின் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. 

கொலை, சட்டவிரோதக் காவலில் வைத்திருத்தல், மோசடி மற்றும் சூதாட்ட விடுதிகளை நடத்துதல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டுள்ளன. 

இவர்களின் செயற்பாடுகளால் 14 சீனப் பிரஜைகள் உயிரிழந்துள்ளதுடன் பலர் காயமடைந்துள்ளனர். 

மியன்மாரின் இந்த மோசடி மையங்களில் ஆயிரக்கணக்கான சீனத் தொழிலாளர்கள் சிறைபிடிக்கப்பட்டிருந்தனர். 

அவர்கள் வெளிநாட்டவர்களை ஏமாற்றும் மோசடி வேலைகளில் கட்டாயப்படுத்தி ஈடுபடுத்தப்பட்டனர். 

2023 ஆம் ஆண்டில் மியன்மாரில் இடம்பெற்ற உள்நாட்டுப் போரின் போது, லாவ்க்காங் நகரைத் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்த இனக்குழு ஆயுதப் படையினர், இந்தக் கும்பலைப் பிடித்துச் சீன அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். 

மியன்மார் இராணுவ அரசாங்கத்தின் ஆதரவுடன் இயங்கி வந்த இந்த மோசடி மாபியா கும்பல்களுக்கு எதிராகச் சீனா எடுத்த மிகக் கடுமையான நடவடிக்கையாக இது பார்க்கப்படுகிறது. 

கடந்த நவம்பர் மாதம் இந்தக் கும்பல் தாக்கல் செய்த மேன்முறையீட்டை நீதிமன்றம் நிராகரித்த நிலையில், தற்போது இந்தத் தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.

இலங்கை சினிமா