வீதியில் இருந்து போதைப்பொருள் பயன்படுத்தியவர்களால் உயர்தர வகுப்பு மாணவி ஒருவருக்கு தொந்தரவு என்றும், அது குறித்து நடவடிக்கை எடுக்குமாறு வட்டுக்கோட்டை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கூறியும் அங்கு பணி புரியும் பொலிஸார் அசண்டையீனமாக செயற்பட்டதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
வலிகாமம் மேற்கு பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டமானது நேற்றையதினம் ஒருங்கிணைப்பு குழு தலைவர் ஸ்ரீபவானந்தாராஜா தலைமையில் நடைபெற்றது. இதன்போது சமூக மட்ட அமைப்பின் பிரதிநிதி ஒருவரால் இந்த குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. அவர் மேலும் தெரிவிக்கையில்,
சிலர் வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதி ஒன்றில் வீதியில் இருந்து போதைப்பொருள் பாவனையில் ஈடுபட்டனர். இதன்போது தகாத வார்த்தைப் பிரயோகங்களை மேற்கொண்டனர். சம்பவம் நடந்த பகுதிக்கு அருகாமையில் உள்ள வீட்டில் உயர்தர வகுப்பு மாணவி ஒருவர் கல்வி கற்றுக் கொண்டிருந்தார்.
இது குறித்து வட்டுக்கோட்டை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு தெரியப்படுத்தியபோது பொலிஸாரை உடனடியாக அனுப்புவதாக அவர் கூறினார். பொலிஸார் நீண்ட நேரமாக வராத காரணத்தால் மீண்டும் பொறுப்பதிகாரிக்கு தெரியப்படுத்தியவேளை அவர் வெளிக்களத்தில் கடமையில் இருந்த பொலிஸ் உத்தியோகத்தரின் தொலைபேசி இலக்கத்தை வழங்கினார்.
நான் அந்த இலக்கத்திற்கு தொடர்புகொண்டு விடயத்தை கூறியவேளை “பொலிஸ் நிலையத்தில் சென்று முறைப்பாடு பதிவு செய்யுங்கள். அதன் பின்னரே வருவோம்” என்று கூறினர்.