BREAKING NEWS

ஒரே நாளில்  500க்கும் மேற்பட்டோர் கைது

PR
priya priya punidha in Latest Updates
Report

குற்றச்செயல்கள் மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளின் ஊடாக நாடளாவிய ரீதியில் குற்றவாளிகளைக் கைது செய்வதற்காகப் பொலிஸாரால் ஆரம்பிக்கப்பட்டுள்ள நாளாந்த விசேட சோதனை நடவடிக்கைகளில் 526 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நேற்று (07) முன்னெடுக்கப்பட்ட இந்த நடவடிக்கையின் போது 36,840 பேர் சோதனைக்கு உட்படுத்தப்பட்டதுடன், இதன்போதே குறித்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களில் குற்றச்செயல்களுடன் நேரடியாகத் தொடர்புடைய 15 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த 144 பேரும் அடங்குவதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும், இந்தச் சோதனை நடவடிக்கையில் மதுபோதையில் வாகனத்தைச் செலுத்திய குற்றச்சாட்டில் 430 பேரும், கவனக்குறைவாக வாகனத்தைச் செலுத்திய குற்றச்சாட்டில் 124 பேரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். 

அத்துடன் ஏனைய போக்குவரத்து விதிமீறல்கள் தொடர்பாக 6,009 பேருக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.