உலகளாவிய எரிசக்தி போக்குவரத்தில் மிக முக்கியப் பங்கு வகிக்கும் ஹோர்முஸ் நீரிணை (Strait of Hormuz) வழியாக நுழைய முயலும் எவர் மீதும் “தீவைக்கப்படும்” என ஈரான் உத்தியோகபூர்வமாக எச்சரித்துள்ளது. ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படையின் (IRGC) தலைமை தளபதியின் ஆலோசகர் இப்ராஹிம் ஜப்பாரி, அந்நாட்டு அரசு தொலைக்காட்சியில் உரையாற்றும்போது இந்த கடும் எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
ஹோர்முஸ் நீரிணை தற்போது மூடப்பட்டுள்ளதை உறுதிப்படுத்திய இப்ராஹிம் ஜப்பாரி, இந்த பகுதிக்கு எந்தவொரு கப்பலும் வரக்கூடாது என்றும், மீறி நுழைந்தால் கடுமையான பதிலடியைச் சந்திக்க நேரிடும் என்றும் எச்சரித்துள்ளார்.
அமெரிக்கா இந்தப் பிராந்தியத்தின் எண்ணெய் வளத்தைக் குறிவைத்துச் செயல்படுவதாகக் குற்றம் சாட்டியுள்ள அவர், இப்பகுதியில் உள்ள அவர்களின் எண்ணெய் குழாய் இணைப்புகளைத் தாக்குவோம் என்றும், அங்கிருந்து எண்ணெய் ஏற்றுமதி செய்ய அனுமதிக்க மாட்டோம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
ஹோர்முஸ் நீரிணை உலகின் மிக முக்கியமான கப்பல் போக்குவரத்துப் பாதைகளில் ஒன்றாகும். உலகின் மொத்த எண்ணெய் மற்றும் எரிவாயு விநியோகத்தில் ஐந்தில் ஒரு பங்கு இந்தக் குறுகிய கடல் பாதை வழியாகவே கொண்டு செல்லப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
