2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, திமுக தனது கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகிறது. இதில் திமுக – காங்கிரஸ் இடையிலான தொகுதி பங்கீட்டில் சிக்கல் நீடிப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த சனிக்கிழமை நடைபெற்ற முதற்கட்ட பேச்சுவார்த்தையில், காங்கிரஸ் தரப்பு 40 தொகுதிகள் மற்றும் ஒரு மாநிலங்களவை (ராஜ்யசபா) இடத்தைக் கேட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த முறை வழங்கப்பட்ட 25 தொகுதிகளை மட்டுமே வழங்க திமுக உறுதியாக இருப்பதாகக் கூறப்படுகிறது. இதை காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் க்ரிஷ் சோடங்கர் ஏற்க மறுத்துவிட்டதாகத் தெரிகிறது.

இந்த இழுபறி நிலையால், காங்கிரஸ் தரப்பு நடிகர் விஜய்யின் ‘தவெக’ (TVK) கட்சியுடன் கூட்டணி குறித்துப் பேசி வருவதாக அரசியல் வட்டாரங்களில் தகவல்கள் கசிந்தன. இதற்கு முன்னதாகவே, காங்கிரஸ் நிர்வாகிகள் சிலர் தவெக உடன் கூட்டணி வைக்கலாம் என்ற கருத்தைத் தெரிவித்து வந்தனர்.
இந்தத் தகவல்களுக்குத் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை முற்றுப்புள்ளி வைத்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது:
“தவெக உடன் கூட்டணி குறித்துப் பேசப்படுவதாக வெளியான தகவல்கள் அனைத்தும் முற்றிலும் அடிப்படை ஆதாரமற்றவை”.
“காங்கிரஸ் கட்சி ஒருபோதும் புறவாசல் வழியாக அரசியல் பேசாது”.
“தவெக அல்லது வேறு எந்தப் புதிய கட்சியுடனும் காங்கிரஸ் கூட்டணி பற்றிப் பேசவில்லை”.
“தவெகவுடன் மறைமுகமாகவோ அல்லது நேரடியாகவோ கூட்டணி பேசச் சொல்லி, தேசிய தலைமை எனக்கு எந்த வழிகாட்டுதலையும் தரவில்லை”.
