ஈரானின் முன்னாள் ஜனாதிபதி மஹ்மூத் அஹ்மதிநெஜாத் வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டதாகக் கூறப்படும் செய்தி தொடர்பில், நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தனது ஆழ்ந்த வருத்தத்தையும் அதிர்ச்சியையும் வெளியிட்டுள்ளார்.
முன்னாள் ஈரானியத் தலைவர் இலங்கையின் நெருங்கிய நண்பராகத் திகழ்ந்தவர் என்றும், இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவதில் அவர் முக்கியப் பங்காற்றியவர் என்றும் நாமல் ராஜபக்ஷ நினைவு கூர்ந்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அழைப்பின் பேரில் 2008 ஆம் ஆண்டு இலங்கைக்கு விஜயம் செய்த அஹ்மதிநெஜாத், சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை நவீனமயமாக்கல் மற்றும் உமா ஓயா பன்முக அபிவிருத்தித் திட்டம் போன்ற முக்கியத் திட்டங்களை ஆரம்பித்து வைத்ததை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
வான்வழித் தாக்குதல்களில் உயிரிழந்ததாகக் கூறப்படும் அனைவரினதும் குடும்பங்களுக்கும் நாமல் ராஜபக்ஷ தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார்.
இந்த இக்கட்டான தருணத்தில் இலங்கை, ஈரான் மக்களுடன் நிற்பதாகத் தெரிவித்த அவர், அனைத்துத் தரப்பினரும் நிதானத்தைக் கடைப்பிடிக்குமாறும், போர்ப் பாதையைத் தவிர்த்து பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்குமாறும் கேட்டுக்கொண்டுள்ளார்.