தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபையின் முன்னாள் தலைவர் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர். துமிந்த சில்வா 15 மில்லியன் ரூபாய் இலஞ்சம் பெற்ற சம்பவத்தில் சந்தேகநபராக பெயரிடப்பட்டுள்ளதாக இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு நீதிமன்றத்திற்கு தெரிவித்தது.
“தெமட்டகொட ருவான்” என்ற போதைப்பொருள் கடத்தல்காரருக்கு பிணை பெற்றுத் தருவதற்கும், அவரது குடும்பத்தினர் கைது செய்யப்படுவதைத் தடுப்பதற்கும் 15 மில்லியன் ரூபாய் இலஞ்சம் பெற்றதாகக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.
இந்த இலஞ்சப் பணம் துமிந்த சில்வாவின் அறிவுறுத்தலின் பேரில் பெறப்பட்டுள்ளதாக இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
இந்த வழக்கில் ஆர். துமிந்த சில்வா இரண்டாவது சந்தேகநபராகப் பெயரிடப்பட்டுள்ளார். முதலாம் சந்தேகநபரான மொஹமட் மொஹைதீன் சப்ராஸ் நவாஸ் ஏற்கனவே கைது செய்யப்பட்டு, மார்ச் 13 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
துமிந்த சில்வா மீதான குற்றச்சாட்டு குறித்து விரிவான விசாரணைகளை நடத்தி நீதிமன்றத்தில் உண்மைகளைத் தெரிவிக்குமாறும் இலஞ்சப் பணம் சட்டத்தரணியிடம் ஒப்படைக்கப்பட்டதாகக் கூறப்படுவது குறித்து அந்த சட்டத்தரணியிடம் வாக்குமூலம் பெற்று சமர்ப்பிக்குமாறும் இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவுக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.