கண்டியிலிருந்து தம்புள்ளைக்கு பயணிகள் பேருந்தில் பயணம் செய்த வெளிநாட்டவரின் தொலைபேசியை தம்புள்ளை தலைமையக காவல்துறை போக்குவரத்துப் பிரிவின் அதிகாரிகள் சில மணி நேரங்களுக்குள் கண்டுபிடித்து கொடுத்துள்ளனர்.
இலங்கைக்கு சுற்றுலா வந்த 28 வயதான சுவிஸ் நாட்டைச் சேர்ந்த வெளிநாட்டவர், கண்டியிலிருந்து அனுராதபுரம் செல்லும் தனியார் பேருந்தில் தம்புள்ளைக்கு சென்றுள்ளார்.
இதன்போது அவரது ஆப்பிள் தொலைபேசி காணாமல் போயுள்ளது. இதனை கண்டுபிடித்து தரும்படி காவல்துறையில் முறைப்பாடளித்துள்ளார்.
உடனடியாகச் செயல்பட்ட சார்ஜென்ட், சுற்றுலாப் பயணியின் பேருந்து பயணச் சீட்டில் குறிப்பிடப்பட்டுள்ள எண்ணைப் பயன்படுத்தி பேருந்தின் உரிமையாளரைத் தொடர்பு கொண்டு ஓட்டுநர் மற்றும் நடத்துனரின் எண்களைப் பெற்றுள்ளார்.
அதன்பின்னர் பத்து நிமிடங்களுக்குள், பேருந்தில் ஒரு தொலைபேசி இருப்பதாகக் கூறி, ஓட்டுநர் தொலைபேசியை தம்புள்ள காவல் நிலையத்திற்கு ஒப்படைத்துள்ளார்.
தொலைபேசியை பெற்றுக் கொண்ட சுற்றுலாப் பயணி “எனக்கு என் உயிர் திரும்பக் கிடைத்தது போல் இருக்கிறது. நான் ஒரு ஆசிரியர், எனது கல்வி மற்றும் எனது வாழ்க்கையிலிருந்து பல மதிப்புமிக்க தரவுகள் இங்கே இருந்தன. இலங்கை காவல்துறை இதை இவ்வளவு புத்திசாலித்தனமாகக் கண்டுபிடிப்பார்கள் என்று நான் ஒருபோதும் நினைத்ததில்லை. இதற்காக நான் காவல்துறைக்கு என்ன செய்ய வேண்டும்?” என தெரிவித்துள்ளார்.
மேலும் சுற்றுலாப் பயணி காவல்துறைக்கு நன்றி தெரிவித்துவிட்டு, சர்வதேச பயண வலைத்தளங்கள் மூலம் இலங்கை காவல்துறையின் இந்த விதிவிலக்கான சேவையைப் பற்றி உலகிற்குத் தெரிவிப்பதாகக் கூறி வெளியேறியுள்ளார்.