ஐக்கிய அரபு அமீரகம் அண்மையில் எதிர்கொண்ட தாக்குதல்கள் குறித்து, அந்நாட்டு ஜனாதிபதி முகமது பின் சயீத் அல் நஹ்யானுடன் இலங்கை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தொலைபேசி ஊடாகக் கலந்துரையாடியுள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பில் தனது ஆழ்ந்த வருத்தத்தையும் கவலையையும் ஜனாதிபதி வெளியிட்டார்.
இது குறித்து ஜனாதிபதி தனது ‘X’ சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவின் முக்கிய அம்சங்கள்:
அனைத்து விதமான வன்முறைகள் மற்றும் பயங்கரவாதச் செயல்களைத் தாம் வன்மையாகக் கண்டிப்பதாக ஜனாதிபதி திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
இந்த இக்கட்டான காலகட்டத்தில், ஐக்கிய அரபு அமீரகத்துடன் இலங்கை தோளோடு தோள் நின்று தனது ஆதரவை வழங்கும் என அவர் உறுதியளித்துள்ளார்.
ஐக்கிய அரபு அமீரகத்துடன் இலங்கை எப்போதும் உறுதியாக நிற்பதுடன், சாத்தியமான அனைத்து வழிகளிலும் உதவத் தயாராக இருப்பதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.