இலங்கையின் பொதுப் போக்குவரத்துச் சேவையை வலுப்படுத்தும் நோக்கில், ஜப்பானிய அரசாங்கம் 8 தாழ்தளப் பேருந்துகளை (Low-floor buses) நன்கொடையாக வழங்கத் தீர்மானித்துள்ளது. இதற்கான அமைச்சரவை அனுமதி தற்பொழுது கிடைத்துள்ளது.
2025 பெப்ரவரி மாதம் ஜனாதிபதிக்கும், நாட்டிற்கு வருகை தந்திருந்த ஜப்பானிய வெளிவிவகார பாராளுமன்ற பிரதி அமைச்சருக்கும் இடையிலான சந்திப்பின் போது, இலங்கையின் பொதுப் பேருந்து போக்குவரத்துத் துறையை மேம்படுத்துவது குறித்துக் கலந்துரையாடப்பட்டது.
குறித்த சந்திப்பின் தொடர்ச்சியாக, இலங்கையிலுள்ள ஜப்பானிய தூதரகத்துடன் மேற்கொள்ளப்பட்ட பேச்சுவார்த்தைகளின் பலனாகவே இந்த நன்கொடை உறுதியானது.
இந்த நன்கொடையைப் பெற்றுக்கொள்வதற்காக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை உத்தியோகபூர்வமாக அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இந்த 8 தாழ்தளப் பேருந்துகள் மூலம் இலங்கையின் பொதுப் போக்குவரத்து சேவையின் தரம் மேலும் மேம்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.