இலங்கையில் மக்களின் வாய்வழி சுகாதார நிலையை மதிப்பிடுவதை நோக்கமாகக் கொண்டு, ஐந்தாவது தேசிய வாய்வழி சுகாதாரக் கணக்கெடுப்பு மார்ச் 10-ம் திகதி முதல் ஆரம்பமாகிறது.
உலக சுகாதார நிறுவனத்தின் பரிந்துரைக்கமைய, எதிர்கால தேசிய வாய்வழி சுகாதாரக் கொள்கைகளை வகுப்பதற்கும், தடுப்புத் திட்டங்களை முன்னெடுப்பதற்கும் தேவையான தரவுகளைச் சேகரிப்பதே இதன் பிரதான நோக்கமாகும்.
இக்கணக்கெடுப்பு மார்ச் 2026 முதல் நவம்பர் 2026 வரை நாடு தழுவிய ரீதியில் இடம்பெறவுள்ளது.
நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள பாடசாலை மாணவர்கள் மற்றும் முதியவர்கள் உள்ளிட்ட அனைத்து வயதினரும் இக்கணக்கெடுப்புக்கு உட்படுத்தப்படவுள்ளனர்.
இது குறித்த விழிப்புணர்வை பொதுமக்களிடையே ஏற்படுத்தும் வகையில், சுகாதார அமைச்சின் பல் மருத்துவ சேவைகள் பிரிவு மற்றும் ஊடகப் பிரிவு இணைந்து விசேட கலந்துரையாடல்களை ஏற்பாடு செய்துள்ளன.