இலங்கையை அண்மையில் உலுக்கிய ‘டிட்வா’ சூறாவளியானது ஒரு சாதாரண இயற்கை சீற்றம் மட்டுமல்ல, அது மனிதத் தலையீடுகளால் உருவான பருவநிலை மாற்றத்தின் நேரடி விளைவு என கிரீன்பீஸ் தெற்காசியா அமைப்பு தனது புதிய அறிக்கையில் எச்சரித்துள்ளது.
வழக்கமான சூறாவளிகள் பலத்த காற்றினால் சேதத்தை ஏற்படுத்தும். ஆனால், ‘டிட்வா’ சூறாவளி முன்னெப்பொழுதும் இல்லாத வகையில் அதிதீவிர கனமழை மூலமே பெரும் அழிவை ஏற்படுத்தியுள்ளது.
கடலோரப் பகுதிகளை விடவும், மத்திய மலைநாட்டிலேயே இந்தச் சூறாவளி கோரத்தாண்டவம் ஆடியுள்ளது. பல நாட்கள் தொடர்ந்து பெய்த மழையினால் மண் அதிகப்படியான ஈரப்பதத்தை உறிஞ்சியதால், இதுவரை பாதுகாப்பான இடங்கள் எனக் கருதப்பட்ட பகுதிகளிலும் நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளன.
மனித நடவடிக்கைகளால் பூமி 1.3°C வெப்பமடைந்ததே, இந்தச் சூறாவளியின் போது பெய்த மழைப்பொழிவு 28% முதல் 160% வரை தீவிரமடையக் காரணமாக அமைந்ததாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
வட இந்தியப் பெருங்கடலின் வெப்பநிலை இயல்பை விட 0. 2°C உயர்ந்துள்ளதால், வளிமண்டலத்தில் கூடுதல் ஈரப்பதம் சேர்ந்து இத்தகைய பெருமழைக்கு வழிவகுத்துள்ளது.புவி வெப்பமடைதல் தொடர்வதால், எதிர்காலத்தில் இவ்வாறான அதிதீவிர வானிலை மாற்றங்கள் இலங்கையில் அடிக்கடி நிகழும் என சர்வதேச நிபுணர்கள் (IPCC) எச்சரித்துள்ளனர்.