யாழ்ப்பாணம், இளவாலை – பெரியவிளான் பகுதியில் மூன்று பிள்ளைகளின் தந்தை ஒருவர் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
டச்சுவீதி, பெரியவிளான் பகுதியைச் சேர்ந்த 31 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். கடந்த 8ஆம் திகதி இவரது குடும்பத்தினர் காங்கேசன்துறை பகுதியில் நடைபெற்ற இசை நிகழ்ச்சி ஒன்றிற்குச் சென்றிருந்த நிலையில், இன்று அதிகாலை வீடு திரும்பிய போதே அவர் சடலமாக இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர்.
சம்பவம் தொடர்பாக இளவாலை பொலிஸாருக்குத் தகவல் வழங்கப்பட்டதை அடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் சடலத்தை மீட்டுள்ளனர். உயிரிழப்பிற்கான காரணம் குறித்து மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர். தற்போது சடலம் உடற்கூற்றுப் பரிசோதனைகளுக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.