மெல்போர்ன் மற்றும் கொழும்பு நகரங்களுக்கு இடையே அதிகரித்து வரும் பயணிகளின் கேள்வியைப் பூர்த்தி செய்யும் வகையில், தனது வாராந்த விமான சேவைகளை 10 ஆக அதிகரிக்க ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் (SriLankan Airlines) தீர்மானித்துள்ளது. இந்த புதிய சேவை விரிவாக்கம் எதிர்வரும் ஆகஸ்ட் 02 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரவுள்ளது.
இலங்கைக்கான சுற்றுலாப் பயணிகளின் வருகையில் அவுஸ்திரேலியா தற்போது முன்னணியில் உள்ளதாலும், அவுஸ்திரேலியாவில் வசிக்கும் இலங்கை வம்சாவளியினர் மற்றும் அங்கு கல்வி பயிலும் மாணவர்களின் வசதியைக் கருத்தில் கொண்டும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக விடுமுறை காலங்களில் தாயகம் திரும்பும் பயணிகளுக்கு இது பெரும் வாய்ப்பாக அமையும்.
தற்போதுள்ள தினசரி விமான சேவைகளுக்கு (UL604/UL605) மேலதிகமாக, ஒவ்வொரு செவ்வாய், வியாழன் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் கீழ்வரும் புதிய விமானங்கள் இயக்கப்படும்:
கொழும்பிலிருந்து மெல்போர்னுக்கு: பிற்பகல் 2:10 மணிக்குப் புறப்பட்டு, மறுநாள் அதிகாலை 4:30 மணிக்கு மெல்போர்ன் சென்றடையும்.
மெல்போர்னிலிருந்து கொழும்புக்கு: அதிகாலை 6:00 மணிக்குப் புறப்பட்டு, நண்பகல் 12:15 மணிக்கு கொழும்பு வந்தடையும்.
இந்த மேலதிக சேவைகள் மூலம், இந்தியாவில் இருந்து கொழும்பு வழியாக மெல்போர்ன் செல்லும் பயணிகளுக்கான இணைப்புகள் (Connections) இலகுவாக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் தெற்காசியாவின் முக்கிய விமானப் போக்குவரத்து மையமாக (Aviation Hub) கொழும்பு தன்னை நிலைநிறுத்திக் கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.