அமெரிக்காவின் வொஷிங்டன் டி.சியில் உள்ள புகழ்பெற்ற ‘நேஷனல் மால்’ (National Mall) பகுதியில், ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மற்றும் மறைந்த பாலியல் குற்றவாளி ஜெப்ரி எப்ஸ்டீன் ஆகியோரைச் சித்தரிக்கும் சர்ச்சைக்குரிய தங்க நிறச் சிலை ஒன்று நேற்று (10) திடீரெனக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
ஜேம்ஸ் கேமரூனின் புகழ்பெற்ற ‘டைட்டானிக்’ திரைப்படத்தில் வரும் ஜாக் மற்றும் ரோஸ் ஆகியோரின் காதல் காட்சியைப் பிரதிபலிக்கும் வகையில் இந்தச் சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது. கப்பலின் முன்பகுதியில் ஜாக், ரோஸின் கைகளைப் பிடித்திருப்பதைப் போலவே, இதில் டிரம்பும் எப்ஸ்டீனும் சித்தரிக்கப்பட்டுள்ளனர். இந்தச் சிலைக்கு “உலகின் ராஜா” (KING OF THE WORLD) எனப் பெயரிடப்பட்டுள்ளது.
இந்தச் சிலையின் கீழ் வைக்கப்பட்டுள்ள பலகையில், “டொனால்ட் டிரம்ப் மற்றும் ஜஃப்ரி எப்ஸ்டீன் இடையேயான பிணைப்பைக் கௌரவிக்கும் வகையில் இந்த நினைவுச் சின்னம் அமைக்கப்பட்டுள்ளது” என அச்சிடப்பட்டுள்ளது. ‘சீக்ரெட் ஹேண்ட்ஷேக்’ (Secret Handshake) என்ற அமைப்பு இந்த வினோதமான சிலையை நிறுவியுள்ளது. 2026-ம் ஆண்டு ஜனாதிபதி டிரம்பிற்கு ஒரு மிகச்சிறந்த ஆண்டாக அமைவதைக் கொண்டாடும் வகையில் இதனை அமைத்ததாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
ஏற்கனவே கடந்த செப்டம்பர் மாதம் இதே அமைப்பு இவர்களின் “பெஸ்ட் பிரண்ட்ஸ் பாரெவர்” (Best Friends Forever) என்ற சிலையை நிறுவிய போது, அது அமெரிக்கப் பூங்கா பொலிஸாரால் உடனடியாக அகற்றப்பட்டது. தற்போது வைக்கப்பட்டுள்ள இந்தச் சிலையும் வரும் மார்ச் 13 ஆம் திகதி (வெள்ளிக்கிழமை) வரை அங்கு வைக்கப்பட்டிருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், பொதுவெளியில் இத்தகைய சர்ச்சைக்குரிய உருவங்கள் வைக்கப்பட்டிருப்பது பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.