அரசாங்கத்திற்குச் சொந்தமான 124 வர்த்தக நோக்கமற்ற நிறுவனங்களின் எதிர்கால நடவடிக்கைகள் மற்றும் மறுசீரமைப்பு தொடர்பான அமைச்சரவை முடிவுகளைச் செயல்படுத்துவது குறித்து, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் நேற்று (10) ஜனாதிபதி அலுவலகத்தில் விசேட கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றது.
அரசாங்கத்தின் கீழ் இயங்கும் பல நிறுவனங்கள் தற்போதைய தேவைகளுக்கு ஏற்ப புதுப்பிக்கப்படாமை, போதிய அதிகாரங்கள் இல்லாமை மற்றும் ஒரே மாதிரியான பணிகளைப் பல நிறுவனங்கள் முன்னெடுத்தல் போன்ற காரணங்களால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, தனியார் துறையினரால் மிகவும் வினைத்திறனாகச் செய்யக்கூடிய பணிகளைச் செய்யும் அரசு நிறுவனங்கள் மற்றும் செயலிழந்து காணப்படும் நிறுவனங்கள் குறித்து அமைச்சரவை 9 பிரிவுகளின் கீழ் தீர்மானங்களை வழங்கியுள்ளது.
பிரதமரின் செயலாளர் பிரதீப் சபுதந்திரி தலைமையிலான இந்த அதிகாரிகள் குழு, அமைச்சரவை முடிவுகள் எந்தளவுக்குச் செயல்படுத்தப்பட்டுள்ளன என்பதை ஆராய்ந்தது. இந்த முன்னேற்றங்கள் குறித்து ஒவ்வொரு மூன்று மாதங்களுக்கும் (காலாண்டுக்கு ஒருமுறை) அமைச்சரவைக்கு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்று ஜனாதிபதி இதன்போது அறிவுறுத்தினார்.
