இலங்கையில் மாற்றுத்திறனாளிகளின் போக்குவரத்து உரிமையை உறுதிப்படுத்தும் நோக்கில், ‘கிளீன் ஸ்ரீலங்கா’ (Clean Sri Lanka) திட்டம் மற்றும் போக்குவரத்து அமைச்சு இணைந்து முன்னெடுக்கும் விசேட முன்னுரிமைப் பேருந்து சேவை அடுத்த மாதம் முதல் உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்படவுள்ளது.

சுமார் 430.7 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் செயல்படுத்தப்படும் இத்திட்டத்திற்காக, முதற்கட்டமாகச் சக்கர நாற்காலிகளைப் பயன்படுத்துவோர் இலகுவாக ஏறி இறங்கக்கூடிய தாழ்தள வசதி (Low Floor) கொண்ட 10 நவீன குளிரூட்டப்பட்ட பேருந்துகள் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடைந்துள்ளன. இவை வரும் சனிக்கிழமை ‘மெட்ரோ பேருந்து’ (Metro Bus) நிறுவனத்திடம் ஒப்படைக்கப்படவுள்ளன.
33 இருக்கைகளைக் கொண்ட இந்தப் பேருந்தில் ஒரே நேரத்தில் 80 பயணிகள் பயணிக்க முடியும்.

சக்கர நாற்காலியில் வருபவர்களுக்கு என விசேட பாதுகாப்பு தொழில்நுட்பங்கள் இதில் உள்ளன.
28 போக்குவரத்துச் சபை ஊழியர்களுக்குச் சைகை மொழி மற்றும் விசேட கையாளுதல் பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளன.
இச்சேவை மாகும்புர பன்முக போக்குவரத்து மையத்திலிருந்து இரண்டு பிரதான வழித்தடங்களில் 40 நிமிடங்களுக்கு ஒருமுறை இயங்கும்:
1.மாகும்பர – புறக்கோட்டை
2.மாகும்பர – கடவத்தை
குறிப்பாக, மகரகம அபேக்ஷா வைத்தியசாலை மற்றும் கொழும்பு தேசிய வைத்தியசாலை ஆகியவற்றுக்குச் செல்லும் நோயாளிகள் மற்றும் உறவினர்களுக்கு இது பெரும் வரப்பிரசாதமாக அமையும்.
இந்த முன்னோடித் திட்டத்தின் வெற்றியின் அடிப்படையில், வரும் ஓகஸ்ட் மாதத்தில் மேலும் 100 பேருந்துகளை இறக்குமதி செய்ய அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. அத்துடன், அனைத்து பேருந்து நிலையங்களையும் மாற்றுத்திறனாளிகள் இலகுவாக அணுகக்கூடிய வகையில் புனரமைக்க ‘கிளீன் ஸ்ரீலங்கா’ திட்டம் நடவடிக்கை எடுத்துள்ளது.
