மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர் பதற்றங்களுக்கு மத்தியில், இலங்கை இந்து சமுத்திர பிராந்திய நாடுகளுடன் மிக நெருக்கமான ஒருங்கிணைப்பை (Integration) ஏற்படுத்திக் கொள்ள வேண்டுமென முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
இந்த ஒத்துழைப்பு என்பது வெறும் பொருளாதார ரீதியானது மட்டுமல்லாது, பாதுகாப்பு மற்றும் அரசியல் ரீதியாகவும் விரிவுபடுத்தப்பட வேண்டும் என அவர் சுட்டிக்காட்டினார். தற்போதைய சர்வதேச நெருக்கடிகளைத் தனித்து எதிர்கொள்வதை விட, பிராந்திய ரீதியாக ஒன்றிணைவதே பாதுகாப்பானது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்து சமுத்திர நாடுகளை ஒருங்கிணைப்பதற்கான சிறந்த அடித்தளமாக ‘இந்து சமுத்திர கடற்படை கருத்தரங்கு’ (Indian Ocean Naval Symposium) மற்றும் ‘கொழும்பு பாதுகாப்பு மாநாடு’ (Colombo Security Conclave) ஆகிய அமைப்புகளைப் பயன்படுத்திக் கொள்ள முடியும் என அவர் யோசனை தெரிவித்துள்ளார்.
மத்திய கிழக்கு மோதலால் ஏற்படக்கூடிய விநியோகச் சங்கிலி பாதிப்புகள் மற்றும் பாதுகாப்பு அச்சுறுத்தல்களைச் சமாளிக்க இந்த பிராந்தியக் கூட்டணிகள் இலங்கைக்குப் பலம் சேர்க்கும் என அவர் மேலும் தெரிவித்தார்.