ஈரானின் புதிய அதி உயர் தலைவர் மொஜ்தபா கமேனி மற்றும் அந்நாட்டின் புரட்சிகர பாதுகாப்புப் படையின் (IRGC) முக்கிய தளபதிகள் பற்றிய இரகசியத் தகவல்களை வழங்குவோருக்கு 10 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வெகுமதி அளிக்கப்படும் என அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் அதிரடியாக அறிவித்துள்ளது.
ஈரானின் நிதி வலையமைப்புகள் மற்றும் அதன் உயர்மட்டத் தலைவர்களின் இருப்பிடம் குறித்த துல்லியமான தகவல்களைப் பெறுவதற்காகவே அமெரிக்கா இந்த பாரிய நிதி வெகுமதியை அறிவித்துள்ளது. குறிப்பாக, இஸ்லாமிய புரட்சிகர பாதுகாப்புப் படையின் (IRGC) சர்வதேச நிதி ஆதாரங்களைச் சிதைப்பதே இதன் முக்கிய நோக்கமாகும்.
மறுபுறம், ஈரானுக்கு எதிராக இஸ்ரேலுடன் இணைந்து தாக்குதல் வியூகங்களை வகுத்துவரும் அமெரிக்கா, மத்திய கிழக்குப் பிராந்தியத்திற்கு மேலதிக இராணுவப் படைகளை அனுப்பத் தீர்மானித்துள்ளது. இதில் மேலதிக தரைப்படை சிப்பாய்கள், கரையோர பாதுகாப்புப் பிரிவினர் மற்றும் அதிநவீன கடற்படைக் கப்பல்கள் உள்ளடங்குகின்றன.
மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றத்தை அடுத்து, தனது நட்பு நாடான இஸ்ரேலின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும், ஈரானின் செல்வாக்கைக் கட்டுப்படுத்தவும் அமெரிக்கா இந்தத் தீவிர இராணுவ நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.