ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் எயார்பஸ் விமானக் கொள்வனவில் இடம்பெற்றதாகக் கூறப்படும் இலஞ்ச ஊழல் தொடர்பான விசாரணைகளில், நீதிமன்றத்தில் ஆஜராகத் தவறியமைக்காக ஷமிந்திர ராஜபக்ஷ (முன்னாள் அமைச்சர் சமல் ராஜபக்ஷவின் புதல்வர்) மற்றும் பிரியங்கா நியோமலி விஜேநாயக்க (ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் முன்னாள் தலைவர் கபில சந்திரசேனவின் மனைவி) ஆகியோருக்கு எதிராகக் கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றம் இன்று பிடியாணை பிறப்பித்துள்ளது.
சந்தேகநபர்கள் தொடர்ந்து விசாரணைக்கு ஆஜராகாததால், இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் வேண்டுகோளுக்கமைய, கொழும்பு பிரதான நீதிவான் அஸங்க எஸ். போதாரகம இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.
சந்தேகநபர்கள் நாட்டை விட்டு வெளியேறுவதைத் தடுக்க, நாட்டிலுள்ள அனைத்து விமான நிலையங்கள் மற்றும் குடிவரவு, குடியகல்வு கட்டுப்பாட்டாளருக்கு நீதிமன்றம் விசேட உத்தரவைப் பிறப்பித்துள்ளது. அவர்கள் நாட்டிற்கு வருகை தரும் பட்சத்தில் உடனடியாகக் கைது செய்து ஆணைக்குழுவிற்கு அறிவிக்க வேண்டும் எனக் கட்டளையிடப்பட்டுள்ளது.
எயார்பஸ் விமானக் கொள்வனவு ஒப்பந்தத்தில் 2 மில்லியன் அமெரிக்க டொலர் இலஞ்சம் பெற்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் கீழ், ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி கபில சந்திரசேன ஏற்கனவே கடந்த மார்ச் 12ஆம் திகதி இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.