BREAKING NEWS

வாழைச்சேனையில் கிளினிக் நிலையம் ஒன்றை நடத்தி வந்த போலி வைத்தியர் கைது

PR
priya priya punidha in Latest Updates
Report
வாழைச்சேனையில் கிளினிக் நிலையம் ஒன்றை நடத்தி வந்த போலி வைத்தியர் கைது

வைத்தியர்கள் போல உடையணிந்து புகைப்படங்களை முகநூலில் பதிவேற்றி தான் வைத்தியர் என வீடு ஒன்றில் மருத்துவ கிளினிக் நிலையம் ஒன்றை கடந்த 3 வருடங்களாக நடத்தி வந்த போலி வைத்தியர் ஒருவரை இன்று வியாழக்கிழமை (22) வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள செம்மண் ஓடை பிரதேசத்தில் வைத்து மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு ஒப்படைத்துள்ளதாக வாழைச்சேனை பொலிசார் தெரிவித்தனர்.

மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவினருக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து கிழக்கு மாகாண பிரதி பொலிஸ் மா அதிபரும் சட்டத்தரணியுமான வர்ண ஜயசுந்தரவின் ஆலோசனையில் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜி.லலித் லீலா ரத்னாவின் வழிகாட்டலில் மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவு பொறுப்பதிகாரியின் தலைமையிலான குழுவினர் சம்பவ தினமான இன்று குறித்த வைத்தியரின் வீட்டில் நடத்தி வந்த கிளினிக் சென்னரை முற்றுகையிட்டனர்.

இதன்போது குறித்த போலி வைத்தியசாலை அனுமதி பத்திரம் மற்றும் வைத்தியர் அடையாள அட்டைகளை கேட்டு சோதனையில் ஈடுபட்ட போது அவரிடம் எந்தவிதமான அனுமதி பத்திரமே வைத்தியராக அடையாளப்படுத்தும் வைத்திய அடையாள அட்டைகள் இல்லாமல் வைத்தியராக செயற்பட்டு வந்துள்ளார் எனவும்.

குறித்த நபர் க.பொ.தர உயர் தரத்தில் மருத்துவ துறையில் கல்வி கற்று வந்துள்ளதாகவும் போதிய புள்ளிகள் இல்லாமல் மருத்துவ துறைக்கு தெரிவு செய்யப்படாமல் உள்ள நிலையில் கண்டிக்கு சென்று அங்கு மருத்துவ துறைக்கு கல்வி கற்று வந்த நிலையில் தனது சொந்த ஊரான செம்மண் ஓடையில் உள்ள தனது வீட்டுக்கு திரும்பி வந்து வைத்தியசாலையில் சத்திரசிகிச்சையில் ஈடுபடும் போது வைத்தியர்கள் அணியும் ஆடை போல உடையை அணிந்து கொண்டு தன்னை தானே புகைப்படம் எடுத்துக் கொண்டதாகவும்

பின்னர் அதனை தொடர்ந்து போலியாக முகநூல் கணக்கு ஒன்றை ஆரம்பித்து அதில் கண்டி பல்லேகல பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவன் போல போலியான தரவுகள் மற்றும் வைத்தியர் போல உடையணிந்த படங்களை தரவேற்றம் செய்து வீட்டில் ஒரு தனியார் வைத்திய கிளினிக் ஒன்றை ஆரம்பித்து கடந்த 3 வருடங்களாக நோயாளிகளுக்கு மருந்துகளை வழங்கி இயங்கி வந்துள்ளதாக பொலிசாரின் ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது

இதனையடுத்து குறித்த போலி வைத்தியரைக செயற்பட்டு வந்த 33 வயதுடையவரை கைது செய்ததுடன் அங்கிருந்த மருந்து பொருட்களான சான்று பொருட்களை மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவினர் மீட்டு ஒப்படைத்துள்ளதாகவும் இவரை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை முன்னெடுத்து வருவதாக பொலிசார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவு மற்றும் வாழைச்சேனை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

((கனகராசா சரவணன்)