BREAKING NEWS

மட்டக்களப்பு வைத்தியசாலையில் நிகழ்ந்த திருட்டுடன் சம்பந்தப்பட்டவர்கள் கைது

MI
mithu mithu in உள்ளூர் செய்திகள்
Report
மட்டக்களப்பு  வைத்தியசாலையில் நிகழ்ந்த திருட்டுடன் சம்பந்தப்பட்டவர்கள் கைது
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகள் மற்றும் தாதியர்கள் வைத்தியர்கள் உட்பட பலரின் கையடக்க தொலைபேசிகள் மற்றும் பணம் என்பவற்றை திருடி வந்த 23 வயதுடைய இளைஞன் ஒருவரையும் கையடக்க தொலைபேசி விற்பனை நிலைய உரிமையாளர் ஒருவர் உட்பட இருவரை நேற்று (13) வியாழக்கிழமை இரவு ஏறாவூரில் வைத்து கைது செய்துள்ளதுடன் திருடப்பட்ட 18 கையடக்க தொலைபேசிகளை மீட்டுள்ளதாக மட்டு தலைமையக பொலிசார் தெரிவித்தனர்.

இது பற்றி மேலும் தெரியவருவதாவது,
மட்டு போதனா வைத்தியசாலையில் நோய்காக தங்கியிருந்து சிகிச்சை பெற்று வந்த ஒருவருக்கு உதவியாக இருந்த பெண் ஒருவரின் கைப்பையில் வைத்திருந்த கையடக்க தொலைபேசி மற்றும் 10 ஆயிரம் ரூபா பணத்துடன் கைப்பை திருட்டு போயுள்ளது தொடர்பாக கடந்த 2 தினங்களுக்கு முன்னர் மட்டு தலைமையக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தனர்.

இதனையடுத்து குறித்த திருட்டு தொடர்பாக சிறு குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸ் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் பிரதீப் பெர்னார்ந்தே தலைமையிலான பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வந்தனர்.

இந்த நிலையில் ஏறாவூர் பிரதான வீதியில் உள்ள கையடக்க தொலைபேசி விற்பனை நிலையம் ஒன்றில் இளைஞன் ஒருவர் 5 கையடக்க தொலைபேசிகளை கொண்டு சென்ற அதன் இரகசிய எண் கொண்ட பூட்டு உடைத்து தருமாறு அந்த கடை உரிமையாளரிடம் வழங்கியுள்ளார்.

இது தொடர்பாக மாவட்ட புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த தகவல் ஒன்றையடுத்து உடனடியாக சம்பவ தினமான நேற்று இரவு முற்றுகையிட்ட பொலிசார் றித்த இளைஞனை கைது செய்து விசாரணையின் போது குறித்த தொலைபேசிகளை மட்டு போதனா வைத்தியசாலையில் திருடி உள்ளதாக தெரிய வந்துள்ளதையடுத்து கடை உரிமையாளர் உட்பட இருவரையும் கைது செய்ததுடன் திருடப்பட்ட 18 கையடக்க தொலைபேசிகள் மற்றும் களணி ஒன்று உட்பட உபகரணங்களை மீட்டனர்.