BREAKING NEWS

பிறப்புச் சான்றிதழை அஞ்சல் சேவையின் ஊடாக பெற எளிய வசதி

MI
mithu mithu in உள்ளூர் செய்திகள்
Report
பிறப்புச் சான்றிதழை அஞ்சல் சேவையின் ஊடாக பெற எளிய வசதி
தேசிய பிறப்புச் சான்றிதழ்களை இலங்கை அஞ்சல் பொதிகள் சேவை மூலம் நேரடியாகக் குடிமக்களுக்கு விநியோகிக்கும் முன்னோடித் திட்டத்தை இன்று முதல் ஆரம்பித்துள்ளதாகப் பதிவாளர் நாயகத் திணைக்களம் அறிவித்துள்ளது.

இந்தத் திட்டம் கம்பஹா மாவட்டச் செயலகத்தில், பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் சந்தன அபேரத்னவின் தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

உத்தியோகபூர்வ ஆவணங்களைப் பாதுகாப்பாகவும் வினைத்திறனுடனும் வழங்குவதற்காகப் பதிவாளர் நாயகத் திணைக்களம் மற்றும் அஞ்சல் திணைக்களம் ஆகியவற்றின் கூட்டு முயற்சியாக இது கருதப்படுகிறது.

மின்னணுப் பிறப்புப் பதிவுத் திட்டத்தின் கீழ் இந்தத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது.

தற்போது, இது ஜனவரி 1, 2021 இற்குப் பின்னர் பிறந்த குழந்தைகளுக்கான பிறப்புச் சான்றிதழ்களை வழங்குவதை உள்ளடக்கியுள்ளது.

இந்த புதிய திட்டம், பொதுமக்களுக்கு வேகமான மற்றும் நம்பகமான சேவையை உறுதி செய்யும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

அஞ்சல் திணைக்களத்துடன் விரைவில் ஒரு முறையான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டு, இந்தச் சேவை நாடு முழுவதும் விரிவுபடுத்தப்படும் என்றும் இந்த முயற்சியை ஒரு “வரலாற்றுச் சாதனை” என்றும் அமைச்சர் பாராட்டினார்.

இந்த நடவடிக்கை, பொதுச் சேவை விநியோகத்தை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட அரசாங்கத்தின் பரந்த டிஜிட்டல் மயமாக்கல் மற்றும் நிர்வாகச் சீர்திருத்த நிகழ்ச்சி நிரலுடன் இணைகிறது என்றும் அவர் மேலும் கூறினார்.