BREAKING NEWS

2026 ஜனவரி: இலங்கை ஆடை ஏற்றுமதி 2.66% வீழ்ச்சி

PR
priya priya punidha in Latest Updates
Report
2026 ஜனவரி: இலங்கை ஆடை ஏற்றுமதி 2.66% வீழ்ச்சி

இலங்கையின் ஆடை ஏற்றுமதி 2026 ஆம் ஆண்டு ஜனவரியில் கடந்த ஆண்டை விட 2.66வீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளது. இதன்படி, 2025 ஆம் ஆண்டு ஜனவரியில் 437.07 மில்லியன் அமெரிக்க டொலராக இருந்த வருமானம் 425.44 மில்லியன் அமெரிக்க டொலர் குறைந்துள்ளது.

இது முக்கிய ஏற்றுமதி சந்தைகளில் நிலவும் தொடர்ச்சியான நெருக்கடியை பிரதிபலிக்கிறது.

அமெரிக்காவிற்கான ஏற்றுமதி 2.73 சதவீதம் வீழ்ச்சியடைந்து 165.11 மில்லியன் அமெரிக்க டொலராகக் காணப்பட்டது. அதேவேளை ஐரோப்பிய ஒன்றியத்திற்கான (பிரித்தானியா தவிர்ந்த) ஏற்றுமதி 1.93 சதவீதம் குறைந்து 126.99 மில்லியன் அமெரிக்க டொலராகப் பதிவாகியுள்ளது. பிரித்தானிய சந்தை ஸ்திரமான நிலையைப் பேணி வருவதுடன், அது 0.23 சதவீதம் எனும் சிறிய வளர்ச்சியுடன் 61.71 மில்லியன் அமெரிக்க டொலர் பெற்றுள்ளது. ஏனைய சந்தைகளுக்கான ஏற்றுமதி 6.07 சதவீதத்தால் சரிவடைந்து 71.63 மில்லியன் அமெரிக்க டொலர்களாகக் குறைந்துள்ளது.

ஜனவரி மாதத்தின் இந்தச் செயல்பாடுகள் உலகளாவிய ரீதியில் சீரற்ற தேவையைக் கோடிட்டுக் காட்டுகின்றன. அத்துடன், சந்தை பன்முகத் தன்மை மற்றும் போட்டித்திறனை வலுப்படுத்த வேண்டிய அவசியத்தையும் இவை வலியுறுத்துகின்றன. பிரித்தானிய சந்தையில் பதிவாகியுள்ள சிறிய அளவிலான வளர்ச்சி ஒரு ஊக்கமளிக்கும் ஆரம்ப அறிகுறியாகும். குறிப்பாக, 2026 ஆம் ஆண்டு ஜனவரி 1 முதல் அமுலுக்கு வந்துள்ள திருத்தப்பட்ட DCTS (வளரும் நாடுகளுக்கான வர்த்தகத் திட்டம்) கட்டமைப்பானது, மூலப்பொருள் கொள்வனவு நெகிழ்வுத்தன்மையை ஸமேம்படுத்தும் என்றும் அந்தச் சந்தையில் இலங்கையின் போட்டித்திறனை அதிகரிக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

அமெரிக்காவின் தற்காலிகமான 10 சதவீத சீரான வரி விதிப்பு முறையானது, இலங்கை ஏற்றுமதியாளர்களுக்கு ஒப்பீட்டளவில் ஒரு சாதகமான முன்னேற்றமாகும். இது முன்னர் காணப்பட்ட அதிகப்படியான நாட்டு-குறிப்பிட்ட வரி விகிதங்களின் சுமையைக் குறைப்பதுடன், குறுகிய கால விலைத் தீர்மானங்களில் தெளிவான தன்மையை மேம்படுத்துகிறது.

ஜனவரி மாதச் செயல்பாடு தொடர்பில் கருத்துத் தெரிவித்த கூட்டு ஆடை சங்க மன்றம்,

‘ஜனவரி மாதத்தில் ஏற்பட்டுள்ள ஒட்டுமொத்த வீழ்ச்சி மிதமானது என்றாலும், இது உலகளாவிய தேவையில் நிலவும் தொடர்ச்சியான தளம்பல் நிலையைப் பிரதிபலிக்கிறது’ எனக் குறிப்பிட்டுள்ளது. மேலும் ‘சந்தைப் பன்முகப்படுத்தல், உற்பத்தி புத்தாக்கம் மற்றும் செயல்பாட்டுத் திறன் ஆகியவற்றின் ஊடாக மீளெழுச்சித் திறனை வலுப்படுத்துவதில் இத்துறை அதிக கவனம் செலுத்துகிறது. அத்துடன், ஒரு நம்பிக்கைக்குரிய ஆடை விநியோக மையமாக இலங்கையின் நிலையைப் பாதுகாப்பதற்குப் பங்குதாரர்களுடன் நெருக்கமாகப் பணியாற்றி வருகிறோம்’ எனவும் தெரிவித்துள்ளது