துபாயிலிருந்து இலங்கை வந்திறங்கிய இரு பயணிகள், சுமார் 15 மில்லியன் (ஒன்றரை கோடி) ரூபாய் பெறுமதியான வெளிநாட்டு சிகரெட்டுகளை சட்டவிரோதமாகக் கடத்த முயன்றபோது விமான நிலைய சுங்க அதிகாரிகளால் கையும் களவுமாகப் பிடிபட்டுள்ளனர்.
இன்று (25) அதிகாலை 3.15 க்கு துபாயிலிருந்து FlyDubai (FZ-569) விமானம் மூலம் வந்த இவர்கள், எவ்வித பொருட்களும் இல்லை எனக் கூறி வெளியேற முயன்றனர்.
கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் கம்பஹாவைச் சேர்ந்த 34 வயதுடைய நபர் (துபாயில் மேற்பார்வையாளர்). மற்றவர் கண்டியைச் சேர்ந்த 25 வயதுடைய பெண் (துபாயில் ஆசிரியையாகப் பணிபுரிபவர்).
இவர்களது 8 பயணப் பொதிகளை (Suitcases) சோதனையிட்டபோது, அவற்றுள் மறைத்து வைக்கப்பட்டிருந்த Manchester மற்றும் Platinum ஆகிய வர்த்தக நாமங்களைக் கொண்ட ஒரு இலட்சம் (100,000) சிகரெட் துண்டுகள் கைப்பற்றப்பட்டன.
கைப்பற்றப்பட்ட சிகரெட்டுகளின் மொத்தப் பெறுமதி சுமார் 15 மில்லியன் ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது. மேலதிக விசாரணைகளை விமான நிலைய சுங்க அதிகாரிகள் முன்னெடுத்து வருகின்றனர்.