இந்தோனேசியாவின் டெர்னாட் அருகிலுள்ள வடக்கு மொலுக்கா கடலில் இன்று (2) காலை 6:48 க்கு 7.4 ரிக்டர் அளவிலான கடலடி நிலநடுக்கம் ஏற்பட்டது. இதையடுத்து தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
மனாடோ பகுதியில் கட்டிடம் இடிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழந்ததுடன், ஒருவர் காயமடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. நிலநடுக்கம் பல இடங்களில் கடுமையாக உணரப்பட்டதால் மக்கள் வெளியே ஓடி தஞ்சம் அடைந்தனர்.
சுமார் 2 மணி நேரத்திற்கு பின்னர் சுனாமி அபாயம் இல்லை என அறிவிக்கப்பட்டு எச்சரிக்கை நீக்கப்பட்டது.
மேலும் 5 ரிக்டர் அளவுக்கு பிந்தைய அதிர்வுகள் பதிவாகியுள்ளதுடன், சில பகுதிகளில் 0.2 முதல் 0.3 மீட்டர் உயரத்தில் சிறிய அலைகள் பதிவாகியுள்ளன.
இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ், மலேசியா உள்ளிட்ட நாடுகளுக்கு ஆரம்பத்தில் எச்சரிக்கை விடுக்கப்பட்டாலும், தற்போது பெரும் சுனாமி அபாயம் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தோனேசியா “பசிபிக் ரிங் ஆஃப் ஃபயர்” பகுதியில் அமைந்துள்ளதால், இத்தகைய நிலநடுக்கங்கள் அடிக்கடி ஏற்படுவது குறிப்பிடத்தக்கது.